திங்கள், அக்டோபர் 15, 2018

அதிகாரம் 117: படர் மெலிந்து இரங்கல் (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 3 - காமம்இயல்: 13 - கற்பியல்; அதிகாரம்: 117 - படர் மெலிந்து இரங்கல்

1161.  மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்கு
           ஊற்றுநீர் போல மிகும்

           விழியப்பன் விளக்கம்: காதலால் விளையும் காமநோயை மறைக்கவே செய்கிறோம்! 
           ஆனால், நீரை இறைக்கும் விவசாயிகளுக்கு ஊரும் ஊற்றுநீர் போல்; மறைக்கும் அளவு 
           மிகும்!
(அது போல்...)
           ஆசையால் பழகும் தீச்செயலை ஒழிக்கவே முயல்கிறோம்! ஆனால், தீயன அழிக்கும் 
           அரசியலாரை எதிர்க்கும் தீயசக்திகள் போல்; ஒழிக்கும் அளவு அதிகமாகும்!
      
1162.  கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்கு
           உரைத்தலும் நாணுத் தரும்

           விழியப்பன் விளக்கம்: காதலால் விளையும் காமநோயை, மறைப்பதை செய்வதறியேன்! 
           நோயை உருவாக்கியவரிடம் சொல்வதும், நாணத்தைத் தரும் என்பதால்; அதையும் 
           செய்கலேன்!
(அது போல்...)
           ஆசையால் விளையும் தீயசிந்தனையை, மறுப்பதை செய்வதறியேன்! சிந்தனையை 
           செயலாக்க முயல்வதும், துன்பத்தைத் தரும் என்பதால்; அதையும் செய்கலேன்!
           
1163.  காமமும் நாணும் உயிர்காவாத் தூங்கும்என்
           நோனா உடம்பின் அகத்து

           விழியப்பன் விளக்கம்: காதலர் பிரிந்த துயரத்தை, பொறுக்க முடியாத என் உடம்பின் 
           உள்ளே; காமமும் நாணமும், உயிரெனும் காவடித் தண்டின் இருபுறமாய் தொங்குகின்றன!
(அது போல்...)
           வேலை பறிபோன இழப்பை, சமாளிக்க முடியாத நம் செயலின் பின்னே; குடும்பமும் பயமும், 
           சிந்தனையெனும் தொடர் வண்டியின் இருபுறமாய் இயங்குகின்றன!

1164.  காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும்
           ஏமப் புணைமன்னும் இல்

           விழியப்பன் விளக்கம்: காதலால் விளையும் காமம் எனும் கடல் என்றும் இருக்கிறதே?! 
           ஆனால், அதை நீந்திக் கடக்கும் பாதுகாப்பான தோணிதான் என்றுமே இல்லை!
(அது போல்...)
           ஊழலால் விளையும் அழிவு எனும் எரிமலை எங்கும் இருக்கிறதே?! ஆனால், அதை அடக்கி 
           ஆளும் முறையான வழிதான் எங்குமே இல்லை!

1165.  துப்பின் எவனாவர் மன்கொல் துயர்வரவு
           நட்பினுள் ஆற்று பவர்

           விழியப்பன் விளக்கம்: காதல் எனும் நட்பில் உள்ளபோதே, பிரிவு எனும் துயர் அளிக்கும் 
           காதலர்; பகைமை வளர்ந்திடின், என்னவாக ஆவாரோ?!
 (அது போல்...)
           தேசம் எனும் பிணைப்பில் உள்ளபோதே, பிரிவினை எனும் கொடுங்கோல் புரியும் 
           அரசியலார்; தேசம் பிரிந்திடின், என்னவெல்லாம் செய்வரோ?!

1166.  இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால்
           துன்பம் அதனிற் பெரிது

           விழியப்பன் விளக்கம்: காதலில் விளையும் காமம் தரும் மகிழ்ச்சி, கடலளவு பெரிது! 
           ஆனால், பிரிவு நேரும்போது; அதே காம உணர்வு தரும் துன்பம், கடலை விட மிகப் பெரிது!
(அது போல்...)
           புரிதலில் விளையும் சிந்தனை தரும் முழுமை, வானளவு பரந்தது! ஆனால், குழப்பம் 
           நேரும்போது; அதே சிந்தனைச் சிதறல் தரும் குறை, வானை விட மிகப் பரந்தது!

1167.  காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்
           யாமத்தும் யானே உளேன்

           விழியப்பன் விளக்கம்: காதலால் விளையும் காமம் எனும் பெருங்கடலில், தொடர்ந்து 
           நீந்தியும் கரையை அடையாமல் தவிக்கிறேன்! நள்ளிரவிலும், நான் மட்டுமே தனித்து 
           இருக்கிறேன்!
(அது போல்...)
           தேடலால் விளையும் பணம் எனும் பேரரங்கில், தொடர்ந்து ஓடியும் முடிவே இல்லாமல் 
           ஓடுகிறேன்! எஞ்ஞான்றும், நான் மட்டுமே தனியே தேடுகிறேன்!

1168.  மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திரா
           என்னல்லது இல்லை துணை

           விழியப்பன் விளக்கம்: புவியிலுள்ள எல்லா உயிர்களையும், உறங்க வைத்து அமைதி 
           அளித்த இரவு; காதற்பிரிவால் தனித்திருக்கும் என்னைத் தவிர்த்து, வேறு துணையின்றி 
           இருக்கிறது!
(அது போல்...)
           சமூகத்திலுள்ள எல்லா மதங்களையும், இணைய வைத்து ஒற்றுமை அளித்த மனிதம்; 
           மதப்பிரிவால் பிறந்திருக்கும் பிரிவினைத் தவிர்த்து, வேறு வழியின்றி இருக்கிறது!

1169.  கொடியார் கொடுமையின் தாம்கொடிய விந்நாள்
           நெடிய கழியும் இரா

           விழியப்பன் விளக்கம்: விடியலை நோக்கி விழித்தே இருந்ததால், நீண்டதாய் கழியும் 
           இரவுடைய இந்நாள்; கொடியரான வாழ்க்கைத்துணை பிரிந்த கொடுமையை விட, 
           கொடுமையாகும்!
(அது போல்...)
           மாற்றத்தை நோக்கி மெளனித்தே இருந்ததால், துன்பமாய் தொடரும் இயல்புடைய 
           இவ்வாழ்க்கை; கொடுங்கோலான அரசாள்வோர் செலுத்தும் கொடுங்கோன்மையை விட, 
           கொடுங்கோலாகும்!

1170.  உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர்
           நீந்தல மன்னோஎன் கண்

           விழியப்பன் விளக்கம்: பிரிந்திருக்கும் காதலரைச் சேர, மனதைப் போல் ஊடுருவிச் செல்ல 
           முடியுமெனில்; இப்படி கண்ணீர் வெள்ளத்தில், என் கண்கள் நீந்தமாட்டாது தானே?
(அது போல்...)
           நாட்டிலிருக்கும் குடும்பத்தைக் காண, மின்னலைப் போல் விரைந்து செல்ல முடியுமெனில்; 
           இப்படி சிந்தனை வலையில், என் செயல்கள் சிறைபடாது தானே?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக