திங்கள், ஜனவரி 18, 2016

ஆன்மாவும் மின்சாரமும்...

  
{என் மனதில் ஆழ்ந்திருந்த விசயங்களைத் தூண்டிய
என் நண்பன் பாரத்துக்கு சமர்ப்பணம்}

          நேற்றிரவு வாட்ஸ்-ஆப் குழுவொன்றில் பாரத் என்ற நண்பன் ஒரு கேள்வியை கேட்டிருந்தான். "எழுத்திச்சித்தர்" பாலகுமாரனின் படைப்பான "கங்கை கொண்ட சோழபுரம்" சார்ந்த இராஜேந்திர சோழனின் வாழ்க்கை வரலாற்றை எங்களுக்கு கதையாய் சொல்லும் மகத்தான பணியை, சிறப்பாய் செய்துகொண்டிருக்கிறான். இடையிடையே, எங்கள் சிந்தனையை தூண்டும் வண்ணம் சில கேள்விகளைக் கேட்பான்; நாங்களும் அதை விவாதிப்போம். அதுபோன்றே, நேற்றும் பாலகுமாரனின் படைப்பிலிருந்து சில வரிகளை நகலாய் அனுப்பி, அது சார்ந்த புரிதலைப் பகிருமாறு சொன்னான். அதில் "மனம் வேறு; உயிர் வேறா?" என்ற ஓர் கேள்வி இருந்தது. நான் - மனமும், "உயிர் என்கிற ஆன்மாவும்" வெவ்வேறானவை - என்று சொல்லி இருந்தேன். உயிரும், ஆன்மாவும் வேறு வேறென்கிற குழப்பமும் இங்குண்டு என்பதால் தான் "உயிர் என்கிற ஆன்மா" என்றேன். ஒரு சில குழுவினர் "மாயை" வார்த்தைகளால் நம்மைக் கட்டுப்படுத்த... 

      "ஆன்மா! ஆன்மா" என்று உரக்கப் பேசி; அதையும் புரியாமல் பேசி நம்மை குழப்பி விடுவர். அதனால் தான், இப்படி சொல்கிறேன். பின்வரும் பகுதிகளில், இவையிரண்டும் ஒன்றே என்ற பொருளில் "ஆன்மா" என்றே குறிப்பிட விழைகிறேன். என்னைப் போன்ற சாதாரணனும் ஆன்மா என்று சொல்ல பழகவேண்டும் என்பதால்தான் இம்முடிவு. தொடர்ந்த விவாதததின் போது...
  • ஆன்மா/உயிர் = மின்சாரம் (Electricity)
  • உடல் = வீடு/அறை (House/Room)
  • நரம்புகள் = மின்கடத்தும் கம்பிகள் (Conducting cables)
  • உயிரணுக்கள் = மின்னணுக்கள் (Electrons)
  • மனம் = மின்சாரத்தின் "மாற்றப்பட்ட சக்தியின்" விளைவு (Effect of the converted electrical energy - மின்விளக்கின் வெளிச்சம்/மின்விசிறியின் காற்றின் வேகம்/மின்னியந்திரத்தின் இயக்கு-வேகம் போன்று!)
என்று வரையறுத்து...
  1. திடீரென்று மின்சாரமே இல்லையென்றானால், மின்சாரம் சார்ந்த மற்ற பொருட்கள் பொருளற்று போகுமல்லவா? அதுபோலவே, ஆன்மாவற்ற உடலும்; உடல் சார்ந்த மற்றவைகளும் கூட பொருளற்று போகும்!
  2. மின்சாரம் இருந்தும் கூட, பல்வேறு காரணங்களுக்காய், மின்சாரம் சார்ந்த மற்ற பொருட்கள் பொருளற்று போகக்கூடும். அதுபோலவே, ஆன்மா இருந்தும், உடலின் மற்ற உடல் சார்ந்த காரணிகள் பொருளற்றுப் போகக்கூடும் {உதாரனங்கள்: "நினைவிழத்தல் (coma) போன்ற நோய்கள் மற்றும் உடல் சார்ந்த குறைபாடுகள்}.
  3. மின்சாரத்தால் விளையும் - மின்விளக்கின்-வெளிச்சம்/மின்விசிறியின்-காற்றின் வேகம்/இயந்திரத்தின்-இயக்குவேகம் - இவையாவும் ஒவ்வொரு தனிப்பொருளின் திறனைப் பொறுத்தது. அதுபோல், மனதால்(சிந்தனையால்) விளையும் புரிதல்கள்/தேடல்கள்/உணர்வுகள் போன்றவையும் ஒவ்வொரு தனி-ஆன்மாவின் (தனிமனிதனை) புரிதலைப் பொறுத்தது. 
    எனவே, ஒவ்வொருவரின் புரிதலும் ஒவ்வொருவரின் சிந்தனையைப் பொறுத்தது என்றேன். எப்போதும் போல், பாரத் அதை வெகுவாய் பாராட்டினான். அவன் பேசிய விதம் அவனுக்குப் பல புரிதல்களை உணர்த்தியதை உறுதி செய்தது. அதை மேலும் தெளிவாய்/விரிவாய் இப்பதிவின் மூலம், இங்கே, என் வலைப்பதிவில் சொல்லவேண்டும் என்று தோன்றியது. இங்கே ஒரு வீடு/அறை என்பதை மனித உடல் என்றும்; மின்சாரம் என்பதை  ஆன்மாவாகவும்(உயிராகவும்); மின்சாரத்தைக் கடத்தும் கம்பிகளை, நரம்புகள் மற்றும் உடலுறுப்புகள் (இரத்த குழாய்கள்) எனவும்; மின்கடத்தியில் உள்ள மின்னணுக்களை, நரம்பில்/உடலுறுப்பில் உள்ள உயிரணுக்கள் என்றும் கொள்வோம். இறுதியாய், மின்சாரத்தால் விளையும் மின்விளக்கு-வெளிச்சம்/மின்விசிறியின்-காற்று/மின்னியந்திரந்தின்-இயங்குதிறன் போன்றவை - சிந்தனை(யி/யா)ல் (மனதில்) விளையும் புரிதல்கள்/தேடல்கள்/உணர்வுகள் என்று கொள்வோம்.

    மேற்கூறிய வண்ணம் யோசித்தால் - மனம் என்பதும், ஆன்மா என்பதும் என்னவென்று திண்ணமாய் புரியும். இரண்டும் வெவ்வேறு என்பது மட்டுமல்ல; மற்ற பல விசயங்களும் புரியும். இருப்பினும், ஒரு விசயத்தை விவரித்து சொல்ல விரும்புகிறேன். மூளைச்சாவு பற்றி நமக்கு தெரியும். அது என்ன மூளை மட்டும் சாவது? இது "மெயின் ஃபியூஸ்" பழுதாவது போல!; ஒரு வாகனத்தின் "இயந்திரம்(எஞ்சின்) பழுதாவது போல! மெயின் பியூஸ்/இயந்திரம் பழுதானால்; வேறு ஃபியூஸ்/எந்திரம் வேண்டும். வேறு மாற்றே இல்லையெனில், இருக்கும் மற்ற பொருட்களை வேறு உபயோகததிற்கு தான் பயன்படுத்தவேண்டும். அதுபோலத்தான், மூளைச்சாவு அடைந்தவரின் உடல்-உறுப்புகள் மற்றவர்களுக்கு உபயோகமாகிறது. விளக்கே எரியாத ஒரு வீடு இருண்ட-வீடாகி பின் பாழடைந்த வீடாகிறது - உயிரற்ற உடல் அழுகுவது போல். அதுபோலவே, இயந்திரமே இல்லாத ஒரு வாகனத்தின் நிலையும். தொடர்ந்த விவாதத்தின் போது...

          இறுதிக்கேள்வியாய்  "கருவுற்ற போது சதைப்பிண்டமாய் இருந்த நமக்கு; உயிரை-ஊட்டுவது இயற்கையா? அல்லது அறிவியலா?" என்றோர் அற்புதமான கேள்வியைக் கேட்டான், பாரத். இந்த "இயற்கையா(இறைவனா)? அறிவியலா??" என்ற கேள்வி ஒரு பேரரசியல்! இது அரசியல் என்பது கூட புரியாத அளவில் இந்த கேள்வி நம்முள் ஆழ விதைக்கப்பட்டிருக்கிறது. எனவே தான்,  பெரும்பான்மையில்... ஆன்மீகம் பற்றி பேசும்போது, அறிவியலை "விலக்கி வைக்க" சொல்லப்படுகிறது. இயற்கை (அல்லது) இறைவன் என்கிற மெய்ஞானமாகட்டும்; அறிவியல் எனும் விஞ்ஞானமாகட்டும் - இரண்டுக்கும் ஓர் அடிப்படை தான் - காரணம் தேடுவது. புரியாத மொழியில் (அல்லது) வார்த்தைகளில்/நமக்கு புரியவே கூடாது எனும் அடிப்படையில் - ஏதோ ஒரு காரணம் சொல்லிவிட்டு "இதுதான் காரணம்! இதை நம்பவேண்டும்!" என்று கண்டிப்புடன் சொல்வது மெய்ஞானம். இங்கே காரணம் "வெறுமனே" கற்பிக்கப்படும்; ஆனால் காரணம்...

   ஆதாரத்துடன் விளக்கப்படாது. இந்த காரணம்-கற்பித்தலைத் தாண்டி உண்மையை ஆதாரத்துடன் அறிய முற்படுவது (அறிவு-இயல்) தான் விஞ்ஞானம். மெய்ஞானத்தில் இருக்கும் உண்மைகளை ஏற்க, எந்த விஞ்ஞானமும் என்றுமே தயங்குவதில்லை. ஆனால், விஞ்ஞானத்தால் மெய்ப்பிக்கப்பட்ட உண்மைகளை கூட; எல்லா மெய்ஞானமும் ஏற்பதில்லை. இதைப் புரிந்துகொண்டால், அந்த இறுதிக் கேள்விக்கான விடையை சரியாய் புரிந்துகொள்ளமுடியும் என்பதால் தான் இந்த முன்விளக்கத்தைக் கொடுக்கிறேன். ஆன்மா எனும் உயிர் எப்படி பிரிகிறது? என்று நம் அனைவருக்குமே தெரியும். ஆன்மாவை உயிர்பித்திருக்க வைக்க தேவைப்படுவது "ஆக்சிஜன்" என்பதும் நமக்கு தெரியும். "சையனைடு" எனும் கொடிய நச்சை உண்டவுடன் அது முதலில் "ஆக்ஸிஜனைக் கொண்டு செல்லும்" உயிரணுக்களைக் கொன்றுவிடுவதாக அறிவியல் சொல்கிறது. இது வெகுவிரைவில் நடைபெறுவதால் ஆக்சிஜன் எடுத்து செல்லும்... 

         தொடர்செயல் உடனடியாய் நிற்கிறது; அதாவது, "ஸ்விட்சை" நிறுத்தியதும்  மின்சாரத்தால் இயக்கப்படுபவை உடனடியாய் நிற்பது போல். எனவே, ஆன்மாவும் உடனடியாய் உடலை விட்டு பிரிகிறது. கருவில் சதைப்பிண்டமாய் இருக்கும் ஒன்றை உயிர்ப்பிப்பதற்கும் இந்த "ஆக்ஸிஜனே" அடிப்படை! அதாவது, ஆக்சிஜன் எடுத்து செல்வது துவக்கி வைக்கப்படும்போது, ஆன்மா உயிர்ப்பிக்கப் படுகிறது. அதாவது "ஸ்விட்சை" தட்டியதும் மின்சாரத்தால் இயக்கப்படுபவை செயல்படுவது போல்! இந்த ஆன்மாவை உயிர்ப்பித்தல் "தொப்பூழ் கொடி"யால் நடக்கிறது என்பதை அறிவியலும் சொல்கிறது; நாமும், சர்வ சாதாரணமாய் தாயைப் பற்றி பேசும்போது சொல்கிறோம். ஆன்மாவுக்கு ஆக்சிஜன் அடிப்படை என்பதை "சிவாஜி திரைப்படத்தில்" வரும் ஒரு காட்சியில், இறந்த சில நிமிடங்களான ஒருவரை உயிர்ப்பிக்கும் காட்சியில் அருமையாய் விளக்கி இருப்பர். அதுபோன்றவற்றின் அடிப்படையில் யோசித்தால், இதைப் புரிந்துகொள்வது...

          அத்தனை கடினமாய் இருக்காது! இப்போது, எல்லோருக்கும் "அப்படியானால், இறந்தவரை உயிர்ப்பிப்பது ஏன் சாத்தியமாவில்லை? அல்லது நாமே ஏன் ஒரு உயிரை ஏன் உருவாக்க முடியவில்லை?!" என்ற கேள்வி எழும்; எனக்குள்ளும் எழுகிறது. இங்கே தான் "இயற்கை (அல்லது) இறைவன்" என்பது, மிகப்பெரிய உயர்-சக்தியாய் பார்க்கப்படுகிறது. இந்த உயர்சக்தியின் மேல், அறிவியல் கற்பிக்கும் விஞ்ஞானத்துக்கும் எந்த சந்தேகமும் இல்லை! இதை அறிவியலால் வெல்ல முடியுமா?! - என்றால்; எனக்கு நிச்சயமாய் தெரியவில்லை! ஆனால், அப்படி ஒன்று நிகழக்கூடாது என்றே நான் விரும்புகிறேன். அப்படியே, எவரேனும் ஒரு விஞ்ஞானி இதை நிகழ்த்தினாலும், அவர் அதை வெளியுலகுக்கு சொல்லக்கூடாது என்பது என் பார்வை. தொழில்-நுட்பங்களாலும், மனிதனுக்கு இருக்கும் 6-ஆவது அறிவாலும் - ஏற்கனவே நிகழ்ந்து கொண்டிருக்கும் அநியாயங்களே ஏராளம்! நாமே ஒரு ஆன்மாவை உயிர்பிக்கும் சக்தி கிடைத்தால்...

        நிச்சயம் இவ்வுலகை அழிக்கும் வரை - மனித இனம் ஓயாது! அதற்காகவாவது "இயற்கை அல்லது இறைவன்" எனும் உயர்சக்தி; எந்த காலத்துக்கும் இதை மனிதன் புரிந்துகொள்வதை அனுமதிக்காது என்றே தோன்றுகிறது; அல்லது அப்படி அனுமதிக்கப்படக்கூடாது என்று நான் விரும்புகிறேன். மனிதன் "அறிவியல் எனும் விஞ்ஞானத்தால்" இதுவரை நிரூபித்தவைகள் அனைத்தையும் புரிந்து கொள்ள முயன்றாலே போதும்; வாழ்வியல் மிகச் சிறப்பாய் அமையும். எனவே "உயிர் எப்படி உருவாகிறது (அல்லது) இறந்தவரை எப்படி உயிர்ப்பிப்பது?" போன்றவற்றை "விஞ்ஞானம் மட்டுமல்ல! மெய்ஞானம் கூட" புரிந்து கொள்ளாமல் இருப்பதே மனித குலத்திற்கு உன்னதமானதாய் நான் பார்க்கிறேன். இது மட்டும் புரிந்துவிட்டால், மனிதன் "இயற்கை அல்லது இறைவன்" என்று உயர்சக்தியை முழுவதுமாய் வென்றுவிடவே முயல்வான். அதனால், எவருக்கும் எந்த பயனும் இல்லாமல் - எல்லோரின் அழிவிற்கே அது உபயோகமாகும். எனவே... 

ஆன்மாவை - உருவாக்கவும்/உயிர்ப்பிக்கவும் - மனிதனுக்கு தெரியாமலேயே இருக்கட்டும்!!! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக