வெள்ளி, ஏப்ரல் 08, 2016

அதிகாரம் 025: அருளுடைமை (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 1 - அறம்; இயல்: 03 - துறவறவியல்;  அதிகாரம்: 025 - அருளுடைமை

0241.  அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம் 
           பூரியார் கண்ணும் உள

           விழியப்பன் விளக்கம்: தற்காலிக மகிழ்ச்சியான, பொருளெனும் செல்வம் - இழிவான 
           மக்களிடமும் உள்ளதால்; நிலைத்த மகிழ்ச்சியான அருளே, செல்வத்துள் முதன்மையான 
           செல்வமாகும்.
(அது போல்...)
           போலியான வலிமையான, கோபமெனும் குணம் - பலவீனமான மக்களிடம் இருப்பதால்;
           அசலான வலிமையான பொறுமையே, குணத்தில் சிறந்த குணமாகும்.

0242.  நல்லாற்றாள் நாடி அருளாள்க பல்லாற்றால் 
           தேரினும் அஃதே துணை


           விழியப்பன் விளக்கம்: நல்ல நெறிகளைப் பழகி, அருளைக் கொண்டிடல் வேண்டும்; 
           பல்வேறு சமயநெறிகளை ஆராய்ந்தாலும், அருளே உன்னதமென புரியும்.
(அது போல்...)
           சரியான வாழ்வியலை உணர்ந்து, உறவைப் பேணுதல் வேண்டும்; பல்வகை வாழ்வியலை 
           ஆய்ந்தாலும், உறவே பலமென தெரியும்.
           
0243.  அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த 
           இன்னா உலகம் புகல்

           விழியப்பன் விளக்கம்: அன்புக்கு அடிபணிந்த, அருள் நிறைந்த உள்ளம் கொண்டோர்க்கு; 
           துன்பமான சூழல்கள் நிறைந்த இருண்ட உலகத்தில் (நரகம்), நுழைதல் சாத்தியமில்லை.
(அது போல்...)
           அறத்திற்கு பயந்து, நேர்மையுடன் செய்திகளை அறிவிக்கும் ஊடகத்துக்கு; அறமற்ற 
           ஊடகங்கள் சூழ்ந்த வியாபாரப் போட்டியில், பங்கேற்றல் இயலாதது.

0244.  மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப 
           தன்னுயிர் அஞ்சும் வினை

           விழியப்பன் விளக்கம்: மண்ணுலகிலுள்ள உயிர்களைப் பேணி, மனிதத்தைப் பகிரும் 
           அன்பர்களுக்கு; தன் உயிருக்கு அஞ்சும்படியான, நிகழ்வுகள் ஏதும் நேராது.
(அது போல்...)
           நாட்டிலுள்ள குடிமக்களைக் காத்து, நீதியை நிலைநாட்டும் அரசியலர்களுக்கு; தம் 
           தோல்விக்கு வழிவகுக்கும், கூட்டணிகள் ஏதும் அமையாது.

0245.  அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும் 
           மல்லன்மா ஞாலங் கரி

           விழியப்பன் விளக்கம்: அருள் உடையவர்க்கு, துன்பமே நேராது என்பதற்கு; காற்றினால் 
           உயிர்த்து, வளம் செழிக்கும் - பரந்த உலகமே சான்றாகும்.
(அது போல்...)
           நற்தலைமை இருப்பின், தோல்வியே நேராது என்பதற்கு; முன்னோரால் வளர்ந்து, 
           வாழ்வை வெல்லும் - சிறந்த குடும்பமே உதாரணமாகும்.

0246.  பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி 
           அல்லவை செய்தொழுகு வார்

           விழியப்பன் விளக்கம்: வாழ்வியலின் அறப்பொருளை விலக்கி, பிறவிப்பயனை மறந்து 
           வாழ்வோர்; அருள் எனும் நல்லறத்தை இழந்து, தீயவை செய்து வாழ்வர்.
(அது போல்...)
           ஆறாவது அறிவை உபயோகிக்காமல், மனிதத்தை உணராமல் இருப்போர்; பகிர்தல் எனும் 
           நற்குணத்தை மறந்து, பிறரை ஏய்த்து பிழைப்பர்.

0247.  அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு 
           இவ்வுலகம் இல்லாகி யாங்கு

           விழியப்பன் விளக்கம்: பொருள் இல்லாதவர்க்கு, நிலவுலகில் சிறப்பில்லாதது போல்; 
           அருள் இல்லாதவர்க்கு, விண்ணுலகில் சிறப்பில்லாமல் போகும்.
(அது போல்...)
           வேலை இல்லாதோர்க்கு, குடும்பத்தில் மதிப்பில்லாதது போல்; பொதுப்பணி
           செய்யாதோர்க்கு, சமூகத்தில் மதிப்பில்லாமல் போகும்.

0248.  பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார் 
           அற்றார்மற் றாதல் அரிது

           விழியப்பன் விளக்கம்: பொருள் இல்லாதவர், பிற்காலத்தில் பொருள் சம்பாதித்து      
           மகிழக்கூடும்! அருள் இல்லாதவர், இல்லாதவரே; அருள் உடையவராதல் அரிது!
                                                                        (அது போல்...)
           கல்வி கற்காதோர், இரவுப்பள்ளியில் படித்து கல்வி கற்கக்கூடும்! சிந்திக்க இயலாதோர்,
           இயலாதோரே; சிந்திக்க வல்லவராதல் அரிது!

0249.  தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின் 
           அருளாதான் செய்யும் அறம்

           விழியப்பன் விளக்கம்: அருள் இல்லாதவரின், அறச்செயலை ஆராய்ந்தால்; அது 
           படிக்காதவர் பாடப் புத்தகங்களின், உண்மைப் பொருளை உணர்வது போன்றது என்பது 
           தெளிவாகும்.
(அது போல்...)
           பொதுநலம் இல்லாதவரின், அரசியலை ஆராய்ந்தால்; அது பயிற்சியற்றோர் போர் 
           விமானங்களை, போர்க் காலத்தில் ஓட்டுவது போன்றது என்பது புரியும்.

0250.  வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின் 
           மெலியார்மேல் செல்லு மிடத்து

           விழியப்பன் விளக்கம்: அருள் உணர்வில்லாமல், நம்மைவிட பலவீனமானவரைத் 
           துன்புறுத்தும் போது; நம்மைவிட வலிமையானவர் முன், நம்நிலையை எண்ணிடல் 
           வேண்டும்.
(அது போல்...)
           மனிதம் உணராமல், கீழ்மட்டத்தில் இருப்போரை தண்டிக்கும்போது; நம்முடைய 
           மேலாளர்கள் முன், நம்நிலையை நினைத்திடல் வேண்டும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக