திங்கள், ஏப்ரல் 18, 2016

அதிகாரம் 026: புலால் மறுத்தல் (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 1 - அறம்; இயல்: 03 - துறவறவியல்;  அதிகாரம்: 026 - புலால் மறுத்தல்

0251.  தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான் 
           எங்ஙனம் ஆளும் அருள்

           விழியப்பன் விளக்கம்: தன்னுடைய தேகத்தை வலிமையாக வைத்துக்கொள்ள, பிறவுயிரின் 
           தேகத்தை உண்பவர்; எப்படி அருளைப் பழகமுடியும்?
(அது போல்...)
           தம்மக்களின் சொத்தை அளவுகடந்து பெருக்கிட, பொதுமக்களின் சொத்தை 
           அபகரிப்பவர்; எப்படி மக்களாட்சியை உணரமுடியும்?

0252.  பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சி 
           ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு

           விழியப்பன் விளக்கம்: பொருட்களைப் பேணாதவர்க்கு, அவற்றை அனுபவித்தல் இயலாது! 
           அதுபோல், இறைச்சியை உண்பவர்க்கு; அருளை அனுபவித்தல் இயலாது!
(அது போல்...)
           சுயத்தைத் தேடாதோர்க்கு, தன்னை உணர்தல் சாத்தியமில்லை! அதுபோல், வாய்மையை 
           மறந்தோர்க்கு; அறத்தை உணர்தல் சாத்தியமில்லை!
           
0253.  படைகொண்டார் நெஞ்சம்போல் நன்னூக்காது ஒன்றன் 
           உடல்சுவை உண்டார் மனம்

           விழியப்பன் விளக்கம்: அழிவுகளை விளைவிக்கும், ஆயுதங்களைக் கொண்டவரின் உள்ளம் 
           போல்; பிறவுயிரின் உடலை சுவைத்து உண்பவர் மனமும், நல்லறத்தை நினைக்காது.
(அது போல்...)
           சீரழிவை உருவாக்கும், தீப்பழக்கத்தை உடையவரின் உறவு போல்; பிறரின் செல்வத்தை 
           அபகரித்து மகிழ்பவர் சிநேகமும், மனிதத்தை விதைக்காது.

0254.  அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல் 
           பொருளல்ல தவ்வூன் தினல்

           விழியப்பன் விளக்கம்: அருளற்றது என்னவெனில், கொல்லாமை எனும் தத்துவத்தைக் 
           கைவிடுவது! அதுபோல், பொருளற்றது என்னவனில்; அப்படிக் கொல்லப்பட்ட 
           இறைச்சியை உண்பது!
(அது போல்...)
           முறையற்றது என்னவெனில், களவாமை எனும் ஒழுக்கத்தை மறப்பது! அதுபோல், 
           மனிதமற்றது என்னவெனில்; அப்படிக் களவாடிய, பொருளை அனுபவிப்பது!

0255.  உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண 
           அண்ணாத்தல் செய்யாது அளறு

           விழியப்பன் விளக்கம்: மாமிசத்தை உண்ணாத அறத்தில் உள்ளது, உயிரினங்களின் 
           நிலைத்தன்மை; புலால் உண்டால், நரகம் வாசல்திறந்து வெளியனுப்பாது.
(அது போல்...)
           நலிந்தோரை ஒடுக்காத நேர்மையில் உள்ளது, பொதுவுடைமயின் நிலைத்தன்மை; 
           நலிந்தோரை ஒடுக்கினால், சமுதாயம் மனமுவந்து ஆதரிக்காது.

0256.  தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும் 
           விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில்

           விழியப்பன் விளக்கம்: உண்பதற்காக, உலகத்தார் உயிர்களைக் கொல்லமாட்டார்கள் 
           எனில்; பொருளாதார வளர்ச்சிக்காக, இறைச்சியை விற்பவரும் இருக்கமாட்டார்கள்.
(அது போல்...)
           பேராசைக்காக, பொதுமக்கள் விதிகளை மீறமாட்டார்கள் எனில்; கையூட்டைப் 
           பெறுவதற்கு, விதிமீறும் அதிகாரிகளும் இருக்கமாட்டார்கள்.

0257.  உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன் 
           புண்ணது உணர்வார்ப் பெறின்

           விழியப்பன் விளக்கம்: றைச்சி என்பது, வேறோர் உயிரின் புண்ணிலிருந்து உருவான சதை; 
           என்ற உணர்வைப் பெற்றவராயின், இறைச்சியை உண்ணாமல் இருக்கவேண்டும்.
(அது போல்...)
           கையூட்டு என்பது, சகமனிதர் ஒருவரின் வியர்வையிலிருந்து விளைந்த பணம்; என்ற 
           உணர்வைக் கொண்டவராயின், கையூட்டைப் பெறாமல் இருக்கவேண்டும்.

0258.  செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார் 
           உயிரின் தலைப்பிரிந்த ஊன்

           விழியப்பன் விளக்கம்: குற்றசெயல்களின் ஆதியை உணர்ந்து, அவற்றைப் பிரிந்த
           அறிவுடையோர்; தலையைப் பிரிந்த ஓருயிரின், உடலை உண்ணமாட்டார்கள்.
(அது போல்...)
           அவநம்பிக்கையின் மூலத்தை ஆராய்ந்து, அதனை முறித்த பண்புடையோர்;
           உறவிலிருந்து முறிக்கப்பட்ட ஒருவரின், அந்தரங்கத்தை ஆராயமாட்டார்கள்.

0259.  அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன் 
           உயிர்செகுத் துண்ணாமை நன்று

           விழியப்பன் விளக்கம்: பல்வேறு எரிபொருட்களைப் பெய்து, ஆயிரம் வேள்விகளைச் 
           செய்வதைவிட; ஓருயிரைக் கொன்று, அதன் உடலை உண்ணாதது சிறந்தது.
(அது போல்...)
           பல்வகை அறமல்லவற்றைச் செய்து, கோடிப் பணத்தைச் சேமிப்பதைவிட; ஒருவரை 
           ஏமாற்றி, அவர் பொருளை அபகரிக்காதது செல்வமானது.

0260.  கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி 
           எல்லா உயிருந் தொழும்

           விழியப்பன் விளக்கம்: ஓருயிரைக் கொல்லாதோர் மற்றும் கொல்லப்பட்ட உயிரின் 
           இறைச்சியை உண்ண மறுப்போர் - இவர்களை, எல்லா உயிர்களும் கைகுவித்து 
           வணங்கும்.
(அது போல்...)
           மக்களை ஏமாற்றாதோர் மற்றும் ஏமாற்றியவரின் ஆட்சியை ஆதரிக்க மறுப்போர் - 
           இவர்களை, எல்லா பொதமக்களும் மனமுவந்து வாழ்த்துவர்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக