ஞாயிறு, அக்டோபர் 11, 2015

அதிகாரம் 007: புதல்வரைப் பெறுதல் (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 1 - அறம்; இயல்: 02 - இல்லறவியல்;  அதிகாரம்: 007 - புதல்வரைப் பெறுதல்

0061.  பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த 
           மக்கட்பேறு அல்ல பிற

           விழியப்பன் விளக்கம்: பெறக்கூடியவற்றில், பகுத்தறிவுடையப் பிள்ளைகளைப் பெறும் 
           பேறைவிட; உயர்ந்த வேறொன்றை நாமறியோம்.
(அது போல்...)
           வாழ்வியலில், தேடலுடைய சிந்தனைகளை விதைக்கும் ஒழுக்கத்தைவிட; 
           மேன்மையளிக்கும் வேறொன்று ஏதுமில்லை.

0062.  எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப் 
           பண்புடை மக்கட் பெறின்

           விழியப்பன் விளக்கம்: பழியில்லாப் பண்புடைய பிள்ளைகளைப் பெற்றிடின்; ஏழு 
           பிறப்பிலும், தீயவையேதும் நம்மை சேர்ந்திடாது.
(அது போல்...)
           பிழையில்லாத் திறனுடையக் கலைஞர்களை உடையின்; ஏழு சுவரங்களிலும், 
           குறையேதும் இசையில் கலந்திடாது.

0063.  தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள் 
           தம்தம் வினையான் வரும்

           விழியப்பன் விளக்கம்: ஒருவரின் செல்வம் என்பது அவரது குழந்தைகளே; அத்தகைய 
           செல்வம், அவரவரின் வினைப்பயனால் நிர்ணயிக்கப்படும்.
(அது போல்...)
           ஒருவரின் ஒழுக்கம் என்பது அவரது செயல்பாடுகளே; அத்தகைய ஒழுக்கம், 
           அவரவரின் சிந்தனையால் பண்படும்.

0064.  அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் 
           சிறுகை அளாவிய கூழ்

           விழியப்பன் விளக்கம்: நம் பிள்ளைகளின், சின்னஞ்சிறு கை துழாவுமேயானால்; கூழ் கூட,     
           அமிழ்தைவிட இனிமையானதாகும்.
(அது போல்...)
           நம் உறவுகளின், கடுகளவு ஆறுதல் கிடைக்குமேயானால்; மலையளவு இன்னலும், 
           கால்மிதிக்கும் சிறுகல்லாகும்.
          
0065.  மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர் 
           சொற்கேட்டல் இன்பம் செவிக்கு

           விழியப்பன் விளக்கம்: பிள்ளைகளைத் தழுவுதல், உடலுக்கு இன்பம்; மற்றும், அவர்கள் 
           பேசுவதைக் கேட்பது செவிக்கு இன்பமாகும்.
(அது போல்...)
           உடலைப் பேணுதல், குடும்பத்திற்கு வளம்; மற்றும், உள்ளிருக்கும் ஆன்மாவைப் 
           பேணுதல் சமுதாயத்திற்கு வளமாகும்.

0066.  குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள் 
           மழலைச்சொல் கேளா தவர்

           விழியப்பன் விளக்கம்: பிள்ளைகளின் மழலைப் பேச்சைக் கேளாதவர்களே; குழல் 
           மற்றும் யாழ் இவைகளிலிருந்து வரும் ஒலியை - இனிதென்பர்.
(அது போல்...)
           அறவழியில் பயணிக்கும் வைராக்கியம் இல்லாதவர்களே; குற்றம் மற்றும் முறையற்றச் 
           செயல்களின் மூலம் பயணிப்பதை - சரியென்பர்.

0067.  தந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்து 
           முந்தி யிருப்பச் செயல்

           விழியப்பன் விளக்கம்: அவையின் நாயகர்களாக இருக்கச்செய்தலே; ஓர் தந்தை தன் 
           பிள்ளைகளுக்கு செய்யக்கூடிய நன்மையாகும்.
(அது போல்...)
           தலைசிறந்தக் குடிமக்களாக இருக்கவைப்பதே; ஓர் தலைவன் தன் நாட்டுமக்களுக்குச் 
           செய்யும் கடமையாகும்.

0068.  தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து 
           மன்னுயிர்க் கெல்லாம் இனிது

           விழியப்பன் விளக்கம்: நம் பிள்ளைகள் அறிவுடையவர்களாய் இருப்பது, நம்மைவிட; 
           அகண்ட மண்ணுலகிலுள்ள எல்லா உயிர்களுக்கும், அதிக மகிழ்வளிக்கும்.
(அது போல்...)
           தன் தொண்டர்கள் நற்தலைவர்களாய் வளர்வது, தன்னைவிட; பரந்த நாட்டிலுள்ள 
           எல்லா மக்களுக்கும், அதிக நன்மையளிக்கும். 

0069.  ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச் 
           சான்றோன் எனக்கேட்ட தாய்

           விழியப்பன் விளக்கம்: தன்பிள்ளைகளைச் சான்றோர் எனப், போற்றப்படுவதைக் கேட்கும் 
           தாய்; அவர்களை ஈன்றெடுத்தப் பொழுதைவிட, பேர்மகிழ்ச்சி அடைவாள்.
(அது போல்...)
           தன்பிள்ளைகள், முதன்முதலாய் அப்பா என்றழைக்கக் கேட்கும் தந்தை; அவர்கள் 
           கருவடைந்த நேரத்தைவிட, பன்மடங்கு ஆனந்தமடைவான்.

0070.  மகன் தந்தைக்கு ஆற்றும்உதவி இவன்தந்தை 
           என்னோற்றான் கொல்எனும் சொல்

           விழியப்பன் விளக்கம்: "இவர்களின் தந்தை எத்தகைய நோன்பு நோற்றிருப்பான்?" என்று 
           பிறரை வியக்கவைப்பதே; பிள்ளைகள், தந்தைக்கு செலுத்தும் நன்றிக்கடனாம்.
(அது போல்...)
           "இவர்களின் ஆட்சியாளர் என்ன வரம் பெற்றிருப்பார்??" என்று பிறரைப் புகழவைப்பதே; 
           குடிமக்கள், ஆள்பவருக்குக் கொடுக்கும் ஊக்கமாகும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக