திங்கள், ஏப்ரல் 03, 2017

அதிகாரம் 061: மடியின்மை (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 2 - பொருள்இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 061 - மடியின்மை

0601.  குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும்
           மாசுஊர மாய்ந்து கெடும்

           விழியப்பன் விளக்கம்: சோம்பல் என்னும் தூசுத் துகள், தொடர்ந்து சேர்ந்தால்; குடும்பம் 
           என்னும் அணையாத விளக்கு, ஒளியை இழந்து கெட்டழியும்!
(அது போல்...)
           குழப்பம் என்னும் அறியாமைக் காரணி, தொடர்ந்து பெருகினால்; கல்வி என்னும் அழியாப் 
           புகழ், புரிதலை இழந்து தடம்புரளும்!
      
0602.  மடியை மடியா ஒழுகல் குடியைக்
           குடியாக வேண்டு பவர்

           விழியப்பன் விளக்கம்: தம் குடும்பத்தை, தலைசிறந்த குடும்பமாய் உயர்த்தும் வைராக்கியம் 
           உடையவர்கள்; சோம்பலை, சோம்பலடையச் செய்யும் ஊக்கமுடன் வாழவேண்டும்!
(அது போல்...)
           தம் சரித்திரத்தை, உலகளாவிய சரித்திரமாய் எழுதிட விரும்பும் தலைவர்கள்; 
           தீவிரவாதத்தை, தீவிரவாதத்தால் ஒழிக்கும் உறுதியுடன் உழைக்கவேண்டும்!
           
0603.  மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த
           குடிமடியும் தன்னினும் முந்து

           விழியப்பன் விளக்கம்: சோம்பலைத் தன்னுடன் இணைத்து வாழும், அறியாமை
           கொண்டோர் பிறந்த குடும்பம்; அவரையும் முந்திக்கொண்டு அழிந்துவிடும்.
(அது போல்...)
           ஊழலைத் தம்முள்ளே புதைத்து வலம்வரும், தீயொழுக்கம் உடையோரைக் கொண்ட
           கட்சி; அவர்களுக்கு முன்பாகவே சிதைந்துவிடும்.

0604.  குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து
           மாண்ட உஞற்றி லவர்க்கு

           விழியப்பன் விளக்கம்: வலிமையான வைராக்கியம் இல்லாமல், சோம்பலில் மூழ்கினால்;
           அவர்களின் குடும்பம் அழிந்து, குற்றச்செயல்கள் அதிகரிக்கும்
(அது போல்...)
           புனிதமான பொதுநலம் இல்லாமல், சுயநலனில் மூழ்கினால்; அவர்களின் ஆட்சி வீழ்ந்து,
           தீயசிந்தனைகள் பெருகும்.

0605.  நெடுநீர் மறவி மடிதுயி நான்கும்
           கெடுநீரார் காமக் கலன்

           விழியப்பன் விளக்கம்: தாமதம்/மறதி/சோம்பல்/தூக்கம் - இவை நான்கும்; வாழ்க்கையை
           அழிக்கும் இயல்புடையோர், விரும்பும் மரக்கலங்களாகும்.
(அது போல்...)
           பொய்/வஞ்சம்/பேராசை/புறங்கூறல் - இவை நான்கும்; குடும்பத்தைச் சிதைக்கும்
           குணமுடையோர், இரசிக்கும் அணிகலன்களாகும்.

0606.  படியுடையார் பற்றுஅமைந்தக் கண்ணும் மடியுடையார்
           மாண்பயன் எய்தல் அரிது

           விழியப்பன் விளக்கம்: நாட்டை ஆளும் ஆட்சியர்களின், அன்பைப் பெற்றவர் எனினும்;
           சோம்பலை உடையவர்கள், ஆகச்சிறந்த நன்மைகளை அடைவது சாத்தியமில்லை.
(அது போல்...)
           வருமானம் குவியும் தொழிலதிபர்களின், பிள்ளைகளாய் பிறந்தவர் எனினும்; சுயமற்ற
           பிள்ளைகள், தலைசிறந்த செயல்களைச் செய்வது அரிதானது.

0607.  இடிபுரிந்து எள்ளும்சொல் கேட்பர் மடிபுரிந்து
           மாண்ட உஞற்றி லவர்

           விழியப்பன் விளக்கம்: வலிமையான வைராக்கியம் இன்றி, சோம்பலை உடையோர்;
           இடித்து உரைக்கும், இகழ்ச்சியான சொற்களுக்கு ஆட்படுவர்.
(அது போல்...)
           உறுதியான அரவணைப்பு இன்றி, உறவை மேற்கொள்வோர்; குடும்பத்தைப் பழிக்கும்,
           தரமற்ற விமர்சனத்துக்கு உள்ளவர்.

0608.  மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு
           அடிமை புகுத்தி விடும்

           விழியப்பன் விளக்கம்: குடிமக்களிடம், சோம்பல் எனும் அழிவுக்காரணி சேர்ந்தால்;
           அவர்களின் பகைவர்களுக்கு, அடிமையாய் இருக்குமாறு செய்துவிடும்.
(அது போல்...)
           குடும்பத்தாரிடம், ஆதிக்கம் எனும் குற்றக்காரணி சேர்ந்தால்; அவர்களின்
           தீக்குணங்களுக்கு, சேவகராய் இருக்குமாறு செய்துவிடும்.

0609.  குடியாண்மை உள்வந்த குற்றம் ஒருவன்
           மடியாண்மை மாற்றக் கெடும்

           விழியப்பன் விளக்கம்: சோம்பலின் ஆளுமையை, மாற்றி முறியடித்தால்; ஆளுமையுள்ள
           குடிமக்களின் மனதில், குடிகொண்ட குற்ற உணர்வுகள் கெட்டழியும்.
(அது போல்...)
           பகையின் ஆணிவேரை, அறுத்து அழித்துவிட்டால்; வம்சத்திலுள்ள உறவுகளின்
           சிந்தனையில், கலந்திட்ட துரோகச் செயல்கள் மறைந்துவிடும்.

0610.  மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
           தாஅயது எல்லாம் ஒருங்கு

           விழியப்பன் விளக்கம்: உலகத்தைத் தன் பாதத்தால் அளந்தவன், கடந்த எல்லா
           பரப்பளவுகளையும்; சோம்பல் இல்லாத அரசாள்பவர், ஒருசேர வாகைசூடுவர்.
(அது போல்...)
           வம்சத்தை தம் உழைப்பால் உயர்த்தியோர், அடைந்த எல்லா சிறப்புகளையும்; சுயநலம்
           இல்லாத பிள்ளைகள், ஒன்றிணைய அடைவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக