சனி, பிப்ரவரி 17, 2018

அதிகாரம் 093: கள்ளுண்ணாமை (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 2 - பொருள்இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 093 - கள்ளுண்ணாமை

0921.  உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்
           கட்காதல் கொண்டொழுகு வார்

           விழியப்பன் விளக்கம்: கள் போன்ற போதைப் பொருட்களில், நாள்தோறும் விருப்பம் 
           கொள்வோர்; தம் பிறவிப்பயனை இழப்பர்! எவரும் அவர்களுக்கு அஞ்சமாட்டார்கள்!
(அது போல்...)
           பொய் போன்ற மனிதமற்ற காரணிகளில், எப்போதும் நம்பிக்கை உள்ளோர்; தம் சுயத்தை 
           இழப்பர்! எவரும் அவர்களோடு உறவாடமாட்டார்கள்!
      
0922.  உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான்
           எண்ணப் படவேண்டா தார்

           விழியப்பன் விளக்கம்: கள் போன்ற போதைத் திரவங்களை அருந்தாதீர்! அருந்தவேண்டும் 
           எனில்; சான்றோரால் உயர்வாய் எண்ணப்பட வேண்டாதோர், மட்டும் அருந்துக!
(அது போல்...)
           இலஞ்சம் போன்ற ஊழல் காரணிகளை  விதைக்காதீர்! விதைக்கவேண்டும் எனில், 
           சமுதாயத்தால் சிறப்பாய் மதிக்கப்பட வேண்டாதோர், மட்டும் விதைக்க!
           
0923.  ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்
           சான்றோர் முகத்துக் களி

           விழியப்பன் விளக்கம்: கள் போன்ற திரவத்தை அருந்தும் பிள்ளைகளைக் கானும், தாயின் 
           முகமே சோகமாகும் எனும்போது; சான்றோர் முகத்தில், மகிழ்ச்சி எப்படி மலரும்?
(அது போல்...)
           ஊழல் போன்ற செயலைச் செய்யும் கட்சிகளைக் காணும், தொண்டர்கள் மனமே 
           வெறுப்பாகும் எனும்போது; பொதுமக்கள் மனதில், விருப்பம் எப்படி எழும்?  

0924.  நாண்என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும்
           பேணாப் பெருங்குற்றத் தார்க்கு

           விழியப்பன் விளக்கம்: கள் போன்ற பேணக்கூடாவற்றை அருந்தும், பெருங்குற்றம் 
           செய்வோர்க்கு; நாணமெனும் நற்பெண், முகத்தைக் காண்பிக்க அஞ்சி முதுகைக் 
           காண்பிப்பாள்!
(அது போல்...)
           மதம் போன்ற பிரிவினையை விதைக்கும், பேரழிவை நாடுவோர்க்கு; மனிதமெனும் 
           பெருதெய்வம், அருளை வழங்க மறுத்து சாபத்தை வழங்கும்!

0925.  கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து
           மெய்யறி யாமை கொளல்

           விழியப்பன் விளக்கம்: பணம் போன்ற பொருளைக் கொடுத்து, கள் போன்ற திரவத்தை 
           அருந்தி; உடல் மயக்கத்தைப் பெறுவது, பிறவிப்பயனை உணராத மயக்கத்துக்கு நிகராகும்!
(அது போல்...)
           ஓட்டு போன்ற உரிமையை விற்று, தொலைக்காட்சி போன்ற இலவசத்தைப் பெற்று; சுய 
           அடையாளத்தை இழப்பது, பரிணாம வளர்ச்சியடையாத அடையாளத்தை அளிக்கும்!

0926.  துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்
           நஞ்சுண்பார் கள்ளுண் பவர்

           விழியப்பன் விளக்கம்: கடமையைத் தவறி உறங்குவோர், இறந்தோரை விட வேறல்லர்! 
           அதுபோல் எந்நாளும் கள் போன்ற திரவம் அருந்துவோர், நஞ்சை அருந்துவோரை விட 
           வேறல்லர்!
(அது போல்...)
           உண்மையை மறைத்துப் பேசுவோர், குற்றவாளியை விட வேறல்லர்! அதுபோல் எப்போதும் 
           வஞ்சம் போன்ற தீமை செய்வோர், கொலை செய்வோரை விட வேறல்லர்!

0927.  அழிவந்த உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்
           கள்ளொற்றிக் கண்சாய் பவர்

           விழியப்பன் விளக்கம்: எந்நாளும் கள் போன்ற திரவமருந்தி, கண்ணில் மயக்கம் 
           கொள்வோர்; அம்மயக்கதை உணர்ந்த உள்ளூர் மக்களால் இழக்கப்படுவர்!
(அது போல்...)
           எந்நேரமும் வஞ்சகம் போன்ற செயலிழைத்து, குணத்தில் மூர்க்கம் கொள்வோர்; 
           அம்மூர்க்கத்தை அறிந்த சுற்றத்து உறவுகளால் விலக்கப்படுவர்!

0928.  களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து
           ஒளித்ததூஉம் ஆங்கே மிகும்

           விழியப்பன் விளக்கம்: கள் போன்ற திரவமருந்தும் பழக்கமிருந்தும், "கள்ளுண்டு அறியேன்" 
           என பொய்ப்பதைக் கைவிடுக! இல்லையேல், நெஞ்சத்தில் மறைத்தது சூழலால் 
           வெளிப்படும்!
(அது போல்...)
           ஊழல் போன்ற தீச்செயல்கள் செய்திருந்தும், "ஊழலே செய்ததில்லை" என 
           முழங்குவதைக் கைவிடுக! அன்றேல், திறமையாய் செய்தது வாய்மையால் வெளிப்படும்!

0929.  களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்
           குளித்தானைத் தீத்துரீஇ அற்று

           விழியப்பன் விளக்கம்: கள் போன்ற திரவத்தின் மயக்கத்தில் இருப்போரை, அறிவுரைக் கூறி 
           திருத்த முயல்வது; நீரில் மூழ்கி இருப்போரை, தீப்பந்தம் கொண்டு தேடுவதற்கு நிகராகும்!
(அது போல்...)
           ஊழல் போன்ற தீமையின் உறவில் இருப்போரை, பதிவுகள் எழுதித் திருத்த முயல்வது; 
           மதத்தால் பிரிந்து இருப்போரை, சாதியால் இணைக்க முயல்வதற்கு இணையாகும்!

0930.  கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால்
           உள்ளான்கொல் உண்டதன் சோர்வு

           விழியப்பன் விளக்கம்: கள் போன்ற திரவம் அருந்துவோர், கள்ளருந்தாத வேளையில்; 
           கள்ளருந்தி மயங்கியோரைக் காணும்போது, தான் அருந்தியதால் விளைந்த சோர்வை     
           உணரமாட்டாரோ?
(அது போல்...)
           ஊழல் போன்ற குற்றம் செய்வோர், தண்டனை அடையாதபோது; ஊழலாடி 
           தண்டிக்கப்பட்டோரைக் காணும்போது, தான் ஊழலாடியாதல் மக்கள் இழந்ததை 
           எண்ணமாட்டாரோ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக