செவ்வாய், பிப்ரவரி 27, 2018

அதிகாரம் 094: சூது (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 2 - பொருள்இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 094 - சூது

0931.  வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்
           தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று

           விழியப்பன் விளக்கம்: வெற்றி பெற்றாலும், சூதை விரும்பவேண்டாம்! சூதில் வென்றவை 
           யாவும், தூண்டில் இரையில் மறைந்திருக்கும் இரும்புக் கொக்கியை; மீன் விழுங்கியது 
           போன்றதாகும்!
(அது போல்...)
           சொத்து குவிந்தாலும், ஊழலைச் செய்யவேண்டாம்! ஊழலில் கிடைப்பவை யாவும், 
           பொறியின் இரையில் சிக்கியிருக்கும் அடைப்புக் கதவை; எலி விடுவிப்பது போன்றதாகும்!
      
0932.  ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்
           நன்றெய்தி வாழ்வதோர் ஆறு

           விழியப்பன் விளக்கம்: ஒன்றைப் பெற்று, நூறை இழக்கும் சூதாட்டக் காரர்களுக்கும்; 
           நல்லறம் பெற்று, பல்வளம் பெற்று வாழ்வதற்கு ஓர் வழி உண்டாகுமோ?
(அது போல்...)
           ஒன்றைக் கொடுத்து, பலதைப் பறிக்கும் அரசியல் வாதிகளுக்கும்; பொதுநலம் பழகி, 
           சுயநலம் துறந்து வாழ்வதற்கு ஓர் உறுதி தோன்றுமோ?
           
0933.  உருளாயம் ஓவாது கூறின் பொருளாயம்
           போஒய்ப் புறமே படும்

           விழியப்பன் விளக்கம்: உருட்டுக்கட்டை உருட்டி சூதாடுவதால் கிடைக்கும் வரவை, ஓயாது 
           கூறி சூதாடினால்; பொருளை முதலிடுவதால் கிடைக்கும் வரவு, விலகிப் பிறர்வசம் சேரும்.
(அது போல்...)
           பொய்சாட்சி சொல்லி ஏய்ப்பதால் கிடைக்கும் மகிழ்வை, தொடர்ந்து விரும்பி ஏய்த்தால்; 
           மெய்யை சொல்வதால் கிடைக்கும் நன்மை, பொய்த்துத் தீமையே விளையும்.  

0934.  சிறுமை பலசெய்து சீரழிக்கும் சூதின்
           வறுமை தருவதொன்று இல்

           விழியப்பன் விளக்கம்: பல துன்பங்களை உருவாக்கி, இருக்கும் தகுதிகளையும் 
           இழக்கவைக்கும் சூதைப் போல்; இல்லாமையை அளிப்பது வேறொன்றுமில்லை!
(அது போல்...)
           பல ஊழல்களைச் செய்து, இருக்கும் உடமைகளையும் பறித்துக்கொள்ளும் அரசைப் 
           போல்; கொடுமையைத் தருவது வேறொன்றுமில்லை!

0935.  கவறும் கழகமும் கையும் தருக்கி
           இவறியார் இல்லாகி யார்

           விழியப்பன் விளக்கம்: சூதாடும் கருவி/சூதாடும் இடம்/சூதாடும் கைத்திறம் - இவை         
           மூன்றிலும் மோகம் கொண்டு, அவற்றைக் கைவிடாதோர்; ஏதும் இல்லாதவர் 
           ஆகியிருக்கிறார்கள்!
(அது போல்...)
           பலியிடும் ஆயுதம்/பலியிடும் கோவில்/பலியிடும் உயிர் - இவை மூன்றிலும் நம்பிக்கைக் 
           கொண்டு, அவற்றை வெறுக்காதோர்; ஏதும் வெல்லாதவர் ஆகியிருக்கிறார்கள்!

0936.  அகடாரார் அல்லல் உழப்பர் சூதென்னும்
           முகடியான் மூடப்பட் டார்

           விழியப்பன் விளக்கம்: சூது என்னும் மூதேவியால் அடக்கியாளப் பட்டோர்; உணவை 
           இழப்பதால், வயிறு நிறையார்! நிம்மதியை இழப்பதால், துன்பத்திற்கும் ஆட்படுவர்!
(அது போல்...)
           பொய் என்னும் அரக்கனால் ஆக்கிரமிக்கப் பட்டோர்; உண்மையை இழப்பதால், மனது 
           நிறையார்! மனிதத்தை மறப்பதால், அழிவுக்கும் உள்ளாவர்!

0937.  பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்
           கழகத்துக் காலை புகின்

           விழியப்பன் விளக்கம்: சூதாடும் இடத்தில், காலையிலேயே நுழைந்து காலத்தைக் கழிக்கும் 
           பழக்கம்; தலைமுறை கடந்த செல்வத்தையும், நற்பண்பையும் அழிக்கும்!
(அது போல்...)
           தீயவர் தலைமையில், இளமையிலேயே சேர்ந்து கடமையைத் தவறும் வழக்கம்; வம்சம் 
           தொடர்ந்த ஒழுக்கத்தையும், நல்லறத்தையும் அழிக்கும்!

0938.  பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்து
           அல்லல் உழப்பிக்கும் சூது

           விழியப்பன் விளக்கம்: தீயொழுக்கமான சூது - பொருளை அழித்து, பொய் சொல்வதை 
           வழக்கமாய் ஆக்கும்! அருளை அழித்து, துன்பத்தை விளைவிக்கும்!
(அது போல்...)
           தீப்பழக்கமான ஊழல் - பொதுநலனை அழித்து, சுயநலம் பெருக்குவதை கொள்கையாய் 
           ஆக்கும்! மனிதத்தை அழித்து, கொடுங்கோன்மையை நிலைநாட்டும்!

0939.  உடைசெல்வம் ஊண்ஒளி கல்விஎன்று ஐந்தும்
           அடையாவாம் ஆயங் கொளின்

           விழியப்பன் விளக்கம்: சூது எனும் தீயொழுக்கத்தை விரும்பி மேற்கொள்வோரை - உடை/
           செல்வம்/உணவு/புகழ்/கல்வி என்னும் ஐந்தும் சேராது!
(அது போல்...)
           பகை எனும் தீக்குணத்தை நேசித்துப் பழகுவோரை - உண்மை/நம்பிக்கை/நட்பு/உறவு/
           பதவி என்னும் ஐந்தும் சேராது!

0940.  இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம்
           உழத்தொறூஉம் காதற்று உயிர்

           விழியப்பன் விளக்கம்: பொருளை இழக்கும் போதெல்லாம், சூதின் மேல் காதல் பெருகுவது 
           போல்; துன்பம் நேரும் போதெல்லாம், உயிரும் காதலிக்கப்பட வேண்டியதாகும்!
(அது போல்...)
           தோல்வியைத் தழுவும் போதெல்லாம், உழைப்பின் மேல் நம்பிக்கை உயர்வது போல்; பிரிவு 
           நிகழும் போதெல்லாம், உறவுகளும் நம்பப்பப்பட வேண்டியவராவர்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக