சனி, அக்டோபர் 15, 2016

அதிகாரம் 044: குற்றங்கடிதல் (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 2 - பொருள்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 044 - குற்றங்கடிதல்

0431.  செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார்
           பெருக்கம் பெருமித நீர்த்து

           விழியப்பன் விளக்கம்: 
குற்றச்செயல்களை விதைக்கும், "ஆணவம்/சினம்/சிறுமைத்தனம்" 
           போன்ற காரணிகளை நீக்கிய ஆட்சியாளரின் வளர்ச்சி; பெரும் போற்றுதலுக்கு 
           உரியதாகும்.
(அது போல்...)
           சிற்றின்பங்களைப் பெருக்கும், "மது/மாது/சூது" போன்ற போதைகளைத் தவிர்த்த 
           படைப்பாளியின் படைப்புகள்; உயரிய முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.
        
0432.  இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா
           உவகையும் ஏதம் இறைக்கு

           விழியப்பன் விளக்கம்: 
கொடையளிக்காத குணம், நன்மையற்ற சுயம் மற்றும் நியாயமற்ற 
           மகிழ்ச்சி - இம்மூன்றும், அரசாள்வோரின் குற்றங்களாகக் கருதப்படும்.
(அது போல்...)
           திருப்தியில்லாத வரவேற்பு, உண்மையற்ற நம்பிக்கை மற்றும் தேவையற்ற துரோகம் - 
           இம்மூன்றும், இல்லத்தலைமையின் பாவங்களாக உணரப்படும்.
           
0433.  தினைத்துணையாம் குற்றம் வரினும் பனைத்துணையாக்
           கொள்வர் பழிநாணு வார்

           விழியப்பன் விளக்கம்: 
பழிக்கு அஞ்சுவோர், தினையளவு குற்றம் விளைவிக்கும் செயலையும்; 
           பனையளவாய் நினைத்து, குற்றங்களைக் களைவர்.
(அது போல்...)
           மக்களை மதிப்போர், துளியளவு ஊழல் நடக்கும் துறையையும்; கடலளவாய் எண்ணி, 
           காரணிகளை அலசுவர்.

0434.  குற்றமே காக்க பொருளாகக் குற்றமே
           அற்றந் தரூஉம் பகை

           விழியப்பன் விளக்கம்: 
குற்றமே அழிவுக்கு வித்திடும் பகை என்பதால்; குற்றச்செயல்களில் 
           இருந்து தற்காத்துக் கொள்வதை, கடமையாகக் கருதவேண்டும்.
(அது போல்...)
           சிற்றின்பமே பிறவிப்பயனை அழிக்கும் நஞ்சு என்பதால்; சிற்றின்பங்களில் இருந்து விலகி 
           இருப்பதை, வைராக்கியமாய் பழகவேண்டும்.

0435.  வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
           வைத்தூறு போலக் கெடும்

           விழியப்பன் விளக்கம்: 
குற்றம் நிகழும் முன்பே, அதைப் பகுத்தறியும் சிந்தனையுடன் 
           தடுக்காதோர் வாழ்க்கை; பெருநெருப்புக்கு அருகிலிருக்கும், வைக்கோற்போர் போல் 
           அழியும்.
(அது போல்...)
           உறவைப் பிரியும் முன்பே, அதை அன்பெனும் கருவியுடன் தவிர்க்காதோர் நிலைமை; 
           சூறாவளியில் அகப்பட்ட, பொருட்கள் போல் தடம்புரளும்.

0436.  தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்
           என்குற்ற மாகும் இறைக்கு

           விழியப்பன் விளக்கம்: 
நிகழ்வதற்கு முன்பாகவே, தன் குற்றத்தைக் களைந்து; பிறர் 
           குற்றத்தையும் களையும் வல்லமையான தலைவனுக்கு, எது குற்றமாக ஆகமுடியும்?
(அது போல்...)
           அனுபவிப்பதற்கு முன்பாகவே, தன் சிற்றின்பத்தைத் தவிர்த்து; பிறர் சிற்றின்பத்தைத் 
           தவிர்க்கும் திறமையான நட்புக்கு, எது சிற்றின்பமாக அமையும்?

0437.  செயற்பால செய்யாது இவறியான் செல்வம்
           உயற்பாலது இன்றிக் கெடும்

           விழியப்பன் விளக்கம்: செய்யவேண்டிய செலவுகளைச் செய்யாமல்; சொத்துகளைச் 

           சேர்ப்போரின் செல்வம், இருக்கக்கூடிய தன்மையில்லாமல் அழியும்.
(அது போல்...)
           சிந்திக்கவேண்டிய விடயங்களைச் சிந்திக்காமல்; இலக்கின்றி வாழ்வோரின் நேரம், 
           பயனளிக்கும் திறனின்றி விரயமாகும்.

0438.  பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும்
           எண்ணப் படுவதொன் றன்று

           விழியப்பன் விளக்கம்: பேராசையால், செலவிட வேண்டியதற்கு செலவிடாத தன்மை; 

           இருக்கும் குற்றங்களில், ஒன்றாக கணக்கிட முடியாத தனிக்குற்றமாகும்.
(அது போல்...)
           அகந்தையால், நியாயமான உரிமையை மறுக்கும் குரூரம்; இருக்கும் தீவிரவாதங்களில், 
           ஒன்றென பட்டியலிட முடியாத தனித்தீவிரமாகும்.


0439.  வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
           நன்றி பயவா வினை

           விழியப்பன் விளக்கம்: எந்த நிலையிலும், தன்னை உயர்வாய் எண்ணி வியக்கக்கூடாது;

           அதுபோல், நல்வினை அளிக்காத செயல்களை விரும்பக்கூடாது.
(அது போல்...)
           எந்த நோக்கத்திலும், நம்மைப் பொய்யாய் சித்தரித்துச் சொல்லக்கூடாது; அதுபோல்,
           நமக்குத் தகுதியற்ற ஒன்றை வாங்கக்கூடாது.

0440.  காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்
           ஏதில ஏதிலார் நூல்

           விழியப்பன் விளக்கம்: ஆசை சார்ந்த செயல்களை, ஆசை வெளியே தெரியாமல்

           செய்பவரை; பகையுணர்வு கொண்ட, பகைவர்களின் எண்ணம் சிதைக்காது.
(அது போல்...)
           எதிர்க்க வேண்டிய விடயங்களில், எதிர்ப்பை மையப்படுத்தாமல் கருத்தை
           முன்வைப்பவரை; விமர்சிக்கும் எண்ணமுள்ள, எவரின் விமர்சனமும் பாதிக்காது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக