செவ்வாய், அக்டோபர் 25, 2016

அதிகாரம் 045: பெரியாரைத் துணைக்கோடல் (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 2 - பொருள்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 045 - பெரியாரைத் துணைக்கோடல்

0441.  அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை 
           திறனறிந்து தேர்ந்து கொளல்

           விழியப்பன் விளக்கம்: அறநெறிகளை உணர்ந்து, அனுபவ அறிவுபெற்ற மூத்தவர்கள்
           நட்பை; அதன் சிறப்பை உணர்ந்து, ஆராய்ந்து அடையவேண்டும்.
(அது போல்...)
           வாழ்வியலை வகுத்து, தலைமுறையை வளர்த்த மூதாதையர் வரலாறை; அதன் மாண்பை
           உணர்ந்து, முயன்று அறியவேண்டும்.
        
0442.  உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும் 
           பெற்றியார்ப் பேணிக் கொளல்

           விழியப்பன் விளக்கம்: நேர்ந்த துன்பத்தை மாற்றி, நேரவிருக்கும் துன்பத்தை முன்பே 
           தடுக்கும்; அனுபவம் உடையவரைப் பேணி, அவரின் துணையைப் பெறவேண்டும்.
(அது போல்...)
           நிகழ்ந்த அனைத்தையும் மறந்து, நிகழவிருக்கும் செயல்களில் மனதைச் செலுத்தும்; 
           வைராக்கியம் உள்ளவரைக் கண்டு, அவரைத் தொடருதல் வேண்டும்.
           
0443.  அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்
           பேணித் தமராக் கொளல்

           விழியப்பன் விளக்கம்: அனுபவமுடையப் பெரியோரைப், பேணித் தமக்கு நெருக்கமாய்
           கொள்வது; பெறமுடிந்த அரிதானப் பேறுகள் அனைத்திலும் அரிதானதாகும்.
(அது போல்...)
           நேர்மையானத் தலைவர்களை, அறிந்து நமக்கு வழிகாட்டியாய் தொடர்வது; சாத்தியமான
           சிறந்த பிறவிப்பயன்கள் அனைத்திலும் சிறந்ததாகும்.

0444.  தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்
           வன்மையுள் எல்லாந் தலை

           விழியப்பன் விளக்கம்: தம்மைவிட அறிவார்ந்தப் பெரியோரைத், தமக்கு நெருக்கமாக்கிக்
           கொள்ளுதல்; வலிமையானவை எல்லாவற்றிலும் முதன்மையாகும்.
(அது போல்...)
           நம்மைவிட வைராக்கியம் உள்ளவரை, நமக்கு குருவாய் தொடருதல்; தேடல்கள்
           அனைத்துக்கும் வழிவகுக்கும்.

0445.  சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்
           சூழ்வாரைச் சூழ்ந்து கொளல்

           விழியப்பன் விளக்கம்: சுற்றத்தாரைத் தன் கண்ணாகக் கொண்டு பயணிப்பதால்;
           அரசாள்பவர் -  சூழ்ந்து கொள்ளவேண்டிய, பெரியோரைச் சூழ்ந்துகொள்ள வேண்டும்.
(அது போல்...)
           பெற்றோரைத் தம் உயிர்மூச்சாய்க் கொண்டு வளர்வதால்; பிள்ளைகள் - பேணிப்
           பாதுகாக்கவேண்டிய, பெற்றோரைப் பேணுதல் வேண்டும்.

0446.  தக்கார் இனத்தனாய்த் தானொழுக வல்லானைச் 
           செற்றார் செயக்கிடந்தது இல்

           விழியப்பன் விளக்கம்: தகுதியுடையப் பெரியோர்களின் வட்டத்தில், தன்னை
           இணைக்கவல்ல வல்லவர்களை; அழிப்பதற்கு, பகைவர்களுக்கு ஒன்றுமில்லை.
(அது போல்...)
           சக்திவாய்ந்த தலைவர்களின் கழகத்தில், தம்மை ஈடுபடுத்தும் இளைஞர்களை;
           தடம்புரட்ட, கேளிக்கைகளுக்கு இடமில்லை.

0447.  இடிக்குந் துணையாரை ஆள்வாரை யாரே
           கெடுக்குந் தகைமை யவர்

           விழியப்பன் விளக்கம்: தவறுகளை இடித்துரைக்கும் பெரியோரின் துணையுடைய 
           அரசாள்பவரை; கெடுக்கும் திறனுடையவர், எவரிருக்க முடியும்?
(அது போல்...)
           குறைகளைக் களையெடுக்கும் சிந்தனையின் வலிமையை அறிந்தவர்களை; அழிக்கும் 
           சிற்றின்பம், ஏதிருக்க முடியும்?

0448.  இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் 
           கெடுப்பா ரிலானுங் கெடும்

           விழியப்பன் விளக்கம்: குறைகளை இடித்துரைக்கும் பெரியோரின் துணையற்ற 
           அரசாள்வோர்; கெடுப்பதற்கு எவரும் இல்லையெனினும், இயல்பாகவே கெட்டழிவர்.
(அது போல்...)
           அறமற்றவற்றைக் களையெடுக்கும் பெற்றோரைக் கொண்டிராத பிள்ளைகள்; தவறானப் 
           பழக்கங்கள் இல்லாதபோதும், வாழ்வியலில் தோற்பர்.

0449.  முதலிலார்க்கு ஊதிய மில்லை மதலையாஞ்
           சார்பிலார்க் கில்லை நிலை

           விழியப்பன் விளக்கம்: முதலீடு செய்யாதவர்க்கு, நிரந்தர வருமானமில்லை! அதுபோல், 
           முட்டுத்தூண் போன்ற பெரியோரின் ஆதரவற்றோர்; நிலைத்திருப்பது சாத்தியமில்லை!
(அது போல்...)
           அடித்தளமற்ற கட்டிடத்திற்கு, நீடித்த ஆயுளில்லை! அதுபோல், வடிகால் போன்ற 
           உறவுகளின் துணையில்லாதோர்; மகிழ்ந்திருப்பது சாத்தியமில்லை!

0450.  பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே 
           நல்லார் தொடர்கை விடல்

           விழியப்பன் விளக்கம்: நல்லறம் போதிக்கும் பெரியவர் ஒருவரின், உறவைக் கைவிடுதல்;   
           பலரின் பகையைக் கொள்வதை விட, பன்மடங்கு அதீத தீமையை விளைவிக்கும்.
(அது போல்...)
           நல்லாட்சி அளிக்கும் தலைவர் ஒருவரை, ஆதரிக்க மறுத்தல்; பல்வகை ஊழல்கள் 
           செய்வதை விட, பன்மடங்கு அதிக ஒழுங்கீனத்தை உருவாக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக