வெள்ளி, மார்ச் 24, 2017

அதிகாரம் 060: ஊக்கமுடைமை (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 2 - பொருள்இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 060 - ஊக்கமுடைமை

0591.  உடையர் எனப்படுவது ஊக்கம்அஃது இல்லார்
           உடையது உடையரோ மற்று

           விழியப்பன் விளக்கம்: 
ஊக்கமெனும் ஒழுக்கம் உடையவரே, உடையவர் ஆவர்! 
           ஊக்கத்தைத் தவிர்த்து மற்றவைகளைக் கொண்டிருப்போர், உடையவர் ஆவரோ?
(அது போல்...)
           மனிதமெனும் அடிப்படை அறிந்தோரே, சான்றோர் ஆவர்; மனிதத்தைத் தவிர்த்துப் 
           பிறவற்றை அறிந்தோர், சான்றோர் ஆவரோ?
      
0592.  உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை
           நில்லாது நீங்கி விடும்

           விழியப்பன் விளக்கம்: 
ஊக்கமுடைய உள்ளத்தைக் கொள்வதே, நிலையான 
           உடைமையாகும்!மதிப்பற்ற பொருள் உடைமைகள், நிலைத்து இருக்காமல் அழிந்து விடும்!
(அது போல்...)
           உயிர்ப்புள்ள அன்பைப் பரிமாறுவதே, உண்மையான உறவாகும்! பணத்தை விரும்பும் 
           உறவுகள், உண்மை இல்லாமல் முறிந்து விடும்!
           
0593.  ஆக்கம் இழந்தேம்என்று அல்லாவார் ஊக்கம்
           ஒருவந்தம் கைத்துஉடை யார்

           விழியப்பன் விளக்கம்: 
உறுதியான ஊக்கத்தைத் தம் வசம் உடையோர்; "சம்பாதித்த 
           செல்வத்தை இழந்தோம்" என புலம்பி, சோர்வடைய மாட்டார்கள்.
(அது போல்...)
           சிறப்பான திறமையைத் தம் வசம் உடையோர்; “கொடுத்த வாய்ப்பை இழந்தோம்” என 
           சொல்லி, துன்பமடைய மாட்டார்கள்.

0594.  ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
           ஊக்கம் உடையான் உழை

           விழியப்பன் விளக்கம்: 
அசைக்கமுடியாத ஊக்கம் உடையவரைச் சேர்ந்திட; அவர்களின் 
           இருப்பிடத்தை அறிந்து, புகழ்/செல்வம் போன்ற வளர்ச்சிகள் தாமே செல்லும்!
(அது போல்...)
           குறைவில்லாத மனிதம் கொண்டோரை அடைய; அவர்களின் சிறப்பை உணர்ந்து, கருணை/
           அறம் போன்ற குணங்கள் தாமே செல்லும்!

0595.  வெள்ளத்து அனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
           உள்ளத்து அனையது உயர்வு

           விழியப்பன் விளக்கம்: பூக்களின் வளர்ச்சி, நீரின் ஓட்டத்திற்கு ஏற்ப இருக்கும்! அதுபோல் 
           புகழ்/செல்வம் போன்ற வளர்ச்சிகள், மக்களின் ஊக்கத்திற்கு ஏற்ப இருக்கும்!
(அது போல்...)
           செயல்களின் அறம், சிந்தனையின் தன்மைக்கு ஏற்ப இருக்கும்! அதுபோல் மனிதம்/நேர்மை 
           போன்ற குணங்கள், குடும்பத்தின் ஒழுக்கத்திற்கு ஏற்ப இருக்கும்!

0596.  உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல் மற்றது
           தள்ளினும் தள்ளாமை நீர்த்து

           விழியப்பன் விளக்கம்: 
சிந்திப்பது அனைத்தும், உயர்ந்த சிந்தனைகளாய் இருக்கவேண்டும்! 
           சில சிந்தனைகள் தவறினாலும், ஊக்கத்தைத் தவறாத வைராக்கியம் வேண்டும்!
(அது போல்...)
           உறவுகள் அனைத்தும், முறையான உறவுகளாய் இருக்கவேண்டும்! சில உறவுகள் 
           தவறானாலும், ஒழுக்கத்தைத் தவறாத முனைப்பு வேண்டும்!

0597.  சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதைஅம்பின்
           பட்டுப்பாடு ஊன்றும் களிறு

           விழியப்பன் விளக்கம்: 
அம்புகள் துளைத்தாலும், யானை தன் உறுதியை நிலைநாட்டும்! 
           அதுபோல் தோல்விகள் நேர்ந்தாலும், ஊக்கமுடையோர் தம் தரத்தை இழக்க மாட்டார்கள்!
(அது போல்...)
           ஆழ்துளைகள் சிதைத்தாலும், பூமி தன் பொறுமையைப்  பேணிக்காக்கும்! அதுபோல் 
           துன்பங்கள் பெருகினாலும், அன்புடையோர் தம் குடும்பத்தைப் பிரிய மாட்டார்கள்!

0598.  உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து
           வள்ளியம் என்னும் செருக்கு

           விழியப்பன் விளக்கம்: கொடை அளிக்கும் ஊக்கம் இல்லாதவர்; இவ்வுலகில் "வள்ளல்" 
           எனும் உயர்ந்த நிலையை அடைவது சாத்தியமில்லை!
(அது போல்...)
           பொதுநலம் காக்கும் முனைப்பு இல்லாதோர்; அரசியலில் "கர்மவீரர்" எனும் சிறந்த 
           பெருமையை அடைவது அரிதானது!

0599.  பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை
           வெரூஉம் புலிதாக் குறின்

           விழியப்பன் விளக்கம்: 
பேருடம்பு மற்றும் கூர்மையான தந்தங்கள் இருந்தும், புலியின் 
           தாக்குதலுக்கு யானை அஞ்சும்! அதுபோல் ஊக்கமுடைமை, எவ்வித தடைகளையும் 
           தகர்க்கும்!
(அது போல்...)
           பீரங்கி மற்றும் வலிமையான அணுகுண்டுகள் இருந்தும், அஹிம்சையின் சக்திக்கு எதிரிகள் 
           மிரள்வர்! அதுபோல் அன்புடைமை, எவ்வித உறவுகளையும் சமாளிக்கும்!

0600.  உரம்ஒருவற்கு உள்ள வெறுக்கைஅஃது இல்லார்
           மரம்மக்கள் ஆதலே வேறு

           விழியப்பன் விளக்கம்: 
ஊக்கம் உடைமையே, ஒருவருக்கு உண்மையான அறிவாகும்! 
           அவ்வூக்கம் இல்லாதோர் மரங்களே; உருவத்தால், மக்களாய் இருப்பதே வேறுபாடு!
(அது போல்...)
           வாய்மை கொண்டிருப்பதே, உறவுக்கு வலிமையான அடிப்படையாகும்! அவ்வாய்மை 
           இல்லாதவை பகையே; சமூகத்திற்காக, உறவுகளாய் இருப்பதே வித்தியாசம்!
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக