செவ்வாய், ஆகஸ்ட் 01, 2017

அதிகாரம் 073: அவையஞ்சாமை (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 2 - பொருள்இயல்: 06 - அமைச்சியல்; அதிகாரம்: 073 - அவையஞ்சாமை

0721.  வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின்
           தொகையறிந்த தூய்மை யவர்

           விழியப்பன் விளக்கம்: சொற்களின் வினைப்பொருளை அறிந்த, குழப்பமற்ற தூய
           அறிவுடையோர்; வல்லவர் அவை என்பதறிந்து அஞ்சி, வாய் தவறியும் பிழையாய்
           பேசமாட்டார்கள்.
(அது போல்...)
           உறவுகளின் வரையறையை உணர்ந்த, கள்ளமற்ற இனிய இல்லறத்தார்; பணக்கார வம்சம்
           என்ற செருக்கில், தன்னிலை மறந்தும் இச்சையை நாடமாட்டார்கள்.
      
0722.  கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்
           கற்ற செலச்சொல்லு வார்

           விழியப்பன் விளக்கம்: அவையச்சம் இன்றி கற்றறிந்தோர் அவையில், தாம் கற்றவற்றை
           அவையோர் ஒப்ப சொல்லும் திறமுடையோர்; கற்றவர்களுள் "முழுமையாய் கற்றவர்"
           எனப்படுவர்.
(அது போல்...)
           குறையேதும் இன்றி வம்சத்தினர் முன்னிலையில், தம் வாழ்வியலை வம்சத்தினர் போற்ற
           வாழும் இயல்புடையோர்; வாழ்ந்தவர்களில் "சிறப்பாய் வாழ்ந்தவர்" எனப்படுவர்.
           
0723.  பகையகத்துச் சாவார் எளியர் அரியர்
           அவையகத்து அஞ்சா தவர்

           விழியப்பன் விளக்கம்: பகைவர்கள் சூழ்ந்த களத்தில், அச்சமின்றி வீரமரணம்
           எய்துவோரைக் காண்பது எளிது! சான்றோர்கள் நிறைந்த அவையில், அச்சமின்றி
           சொற்பொழிவு ஆற்றுவோரைக் காண்பது அரிது!
(அது போல்...)
           சிக்கல்கள் நிறைந்த உறவில், குற்றவுணர்வின்றி துரோகம் செய்வோரை எளிதில்
           காணலாம்! மகிழ்ச்சி நிறைந்த உறவில், குற்றவுணர்வின்றி துரோகம் செய்வோரைக்
           காண்பது அரிதானது!

0724.  கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற
           மிக்காருள் மிக்க கொளல்

           விழியப்பன் விளக்கம்: கற்றறிந்தோர் அவையில் நாம் கற்றதை, அச்சமின்றி அவர்கள் ஒப்பப்
           பகிர்ந்து; நம்மை விட அதிகம் கற்றவர்களிடம் இருந்து, சிறந்ததைக் கற்றுக்கொள்ள
           வேண்டும்.
(அது போல்...)
           வாழ்ந்துணர்ந்த முதியோரிடம் நம் வாழ்க்கையை, தயக்கமின்றி அவர்கள் வாழ்த்த
           உரைத்து; நம்மை விட சிறந்து வாழ்ந்தவர்களிடம் இருந்து, அரிதானதைத்
           தெரிந்துகொள்ள வேண்டும்.

0725.  ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா
           மாற்றம் கொடுத்தற் பொருட்டு

           விழியப்பன் விளக்கம்: சான்றோர்கள் நிறைந்த அவையில், அவையச்சம் ஏதுமின்றி பதில்
           சொல்லும் பொருட்டு; வாழ்வியல் நெறிகளை, தேவையான அளவயறிந்து கற்கவேண்டும்.
(அது போல்...)
           ஒழுக்கமானோர் நிறைந்த வம்சத்தில், குறையொழுக்கம் ஏதுமின்றி வாழ்ந்து காட்டும்
           பொருட்டு; முன்னோரின் வரலாற்றை, அவசியமான அளவுக்கு அறியவேண்டும்.

0726.  வாளொடுஎன் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடுஎன்
           நுண்ணவை அஞ்சு பவர்க்கு

           விழியப்பன் விளக்கம்: வலிமையான வீரர் அல்லாதவர்க்கு, வாளுடன் என்ன தொடர்பு?
           நுண்ணறிவு உடையோர் அவையைக் கண்டு அஞ்சுவோர்க்கு, நூலுடன் என்ன தொடர்பு?
(அது போல்...)
           இயல்பான அன்பு இல்லாதவர்க்கு, உறவுடன் என்ன தொடர்பு? சுயவொழுக்கம் நிறைந்த
           கட்சியை விமர்சனம் செய்வோர்க்கு, பொதுநலத்துடன் என்ன தொடர்பு?

0727.  பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து
           அஞ்சும் அவன்கற்ற நூல்

           விழியப்பன் விளக்கம்: அறிவார்ந்த அவையினர் முன், பேசுவதற்கு அஞ்சுவோர் கற்ற நூல்;
           அச்சுறுத்தும் பகைவர்கள் முன், கோழையின் கையிலிருக்கும் வாளைப் போன்றதாகும்.
(அது போல்...)
           தேர்ந்தெடுத்த மக்கள் முன், தோன்றுவதற்கு பயப்படுவோர் பெற்ற வாக்குகள்; கொடிய
           விலங்குகள் முன், பயிற்சியற்றோர் கொண்டிருக்கும் கூண்டைப் போன்றதாகும்.

0728.  பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள்
           நன்கு செலச்செல்லா தார்

           விழியப்பன் விளக்கம்: நல்லறிவு கொண்ட அவையினர் மத்தியில், அச்சமின்றி
           நன்முறையில் எடுத்துரைக்க முடியாதோர்; பல்வகைப் பாடங்களைக் கற்றிருந்தும்,
           பயனற்றவரே ஆவர்.
(அது போல்...)
           முழுப்பலம் உடைய ஆட்சியினர் முன், தயக்கமின்றிக் குறைகளை இடித்துரைக்க
           இயலாதது; பல்வகை வசதிகளைக் கொண்டிருக்கும், பிணவறையைப் போன்றதாகும்.

0729.  கல்லா தவரின் கடைஎன்ப கற்றறிந்தும்
           நல்லார் அவையஞ்சு வார்

           விழியப்பன் விளக்கம்: பலவற்றைக் கற்றறிந்து இருப்பினும், நல்லறிவு கொண்டோர்
           அவைக்கு அஞ்சுவோர்; கல்வியறிவு இல்லாதவரை விட, அடுத்த நிலையிலேயே
           வைக்கப்படுவர்.
(அது போல்...)
           பல்வகை உறவுகள் இருப்பினும், ஈன்றெடுத்தப் பெற்றோரை விலக்கி வைத்திருப்போர்;
           உறவேதும் இல்லாதவரை விட, அதிகமானத் துன்பத்தையே சந்திப்பர்.

0730.  உளரெனினும் இல்லாரோடு ஒப்பர் களனஞ்சிக்
           கற்ற செலச்சொல்லா தார்

           விழியப்பன் விளக்கம்: அவையைக் கண்டு அஞ்சி, தாம் கற்றதை நன்முறையில்
           எடுத்துரைக்க இயலாதோர்; உயிருடன் இருப்பினும், இறந்தவருக்கு இணையாவர்.
(அது போல்...)
           பகைவரைப் பார்த்து பயந்து, தம் வலிமையை முழுமையாய் வெளிப்படுத்த முடியாதோர்;
           வீரராய் இருப்பினும், கோழைக்கு ஒப்பாவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக