வெள்ளி, ஆகஸ்ட் 25, 2017

திரு. பார்த்திபன் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு...


           திரு. பார்த்திபன் அவர்களே,

      மேலுள்ள புகைப்படத்தைப் பார்த்தவுடன், எதைப்பற்றி எழுதப் போகிறேன் என்பது புரியும். எனவே, எழுதவிருப்பதைப் பற்றிய முன்னுரை அவசியமில்லை! ஆனால் உங்களின் மீதான என்னைப் போன்றோரின் அபிமானத்திற்கு, ஓர் முன்னுரை கொடுப்பது  அவசியமாகிறது:
  • உங்களின் தனித்தன்மை மட்டுமே, என்னைப் போன்றோர் உங்களின் அபிமானியாக இருக்க காரணம். உங்கள் தன்மையிலிருந்து நீங்கள் "சாதாரணனாய்" மாறிட விரும்பினால், அது உங்கள் உரிமை! அதை, எங்கள் எவராலும் தடுக்க முடியாது. ஆனால், அதைத் தவறென; முறையாய் சுட்டிக் காட்டவேண்டிய கடமை எங்களுக்குள்ளது. என் விமர்சனம் கூட  - "இதுவரை, உங்களைக் கண்ணியம் இழந்து விமர்சிக்காத" மற்ற அன்பர்களை போன்று, உங்கள் மேலிருக்கும் "அக்கறையோடே" எழுதப்படுகிறது.
  • திரைப்படங்கள் மட்டுமல்ல! நடைமுறை வாழ்க்கையிலும் என் போன்றோரை, உம் பால் ஈர்த்தவர் நீங்கள். உங்கள் பிள்ளைகளுக்கு, தாய்/தந்தை இருவரின் முதழெழுத்தைச் சேர்த்து "P.S" என்பதை இணைத்து பெயரிட்டது துவங்கி; உங்களின் பொதுசேவை உட்பட, பலவற்றை அதற்கு காரணமாய் சொல்லலாம். அதனால் தான்; திரையுலகில் இருக்கும் பலரின் நடைமுறை வாழ்வுப் பிரச்சனையை, வெறும் செய்தியாய் கடக்கும் பலரால், உம் வாழ்க்கையில் ஓர் பிரச்னை என்றால் "செய்தியாய் கடக்காமல், மனம் வருந்திட" செய்கிறார்கள்.
*******
  • சரி... மேற்குறிப்பிட்ட முன்னரையுடன், விடயத்திற்கு வருகிறேன். ஓர் திரைப்படத்தின் இசை-வெளியீட்டு விழாவில், நீங்கள் பேசிய காணொளியொன்றை மூன்று தினங்கள் முன் முகநூலில் பதிவேற்றம் செய்திருந்தீர்கள். அன்று காலையில் அதைப் படித்தத்தில் இருந்தே; மனது அலைபாய்ந்து கொண்டிருக்கிறது. நான் மட்டுமல்ல! அந்தப் பதிவின் பின்னூட்டங்கள்; ஆயிரக் கணக்கானோர் அதுபோலவே வருந்தியதை உணர்த்தியது. இன்னமும் கூட "நீங்களா, அப்படிப் பேசினீர்கள்?!" என்று நம்பமுடியாமல் வியந்து கொண்டிருக்கிறேன்.
  • பிரபலமான திரைப்படத்தின் இசை-வெளியீடு என்றால், அதில் உங்களின் பேச்சின்றி இருக்க வாய்ப்பே இல்லையெனும் அளவில்; எண்ணிக்கையற்ற இசை-வெளியீட்டு விழாக்களில் நீங்கள் பேசியிருக்கிறீர்கள்! ஆனால், இதுவரை எந்த பேச்சுக்கும் இப்படிப்பட்ட விமர்சனத்தை எவரும் பார்த்ததில்லை! "அதிமேதாவித் தனமாய் பேசுகிறார்!" என்பதே, சிலரின் அதிகப்படியான விமர்சனமாய் இருக்கும். அதைக்கூட, உங்கள் "தனித்துவமான சிந்தனை"க்கு கிடைக்கும் பாராட்டாக(வே) நினைக்கலாம்!
  • "அப்படியிருக்க, உங்களின் அந்தப் பதிவைப் பார்த்தவுடன்; அத்தனை விமர்சனங்கள் ஏன் எழுந்தன?!" - இதை நீங்கள் சிந்திக்க வேண்டாமா?! "அந்த மேடையில் பேசும்போதே உணர்ந்திருக்க வேண்டிய" நீங்கள்; பின் "உங்கள் முதல் பதிவுக்கான" விமர்சனங்களை படித்தவுடனாவது உணர்ந்திருக்க வேண்டும். அதையும் செய்யாமல் "கொடுத்த காசுக்கு மேல் கூவினேனா?!" என்ற தலைப்பிட்ட வேறோர் பதிவையும் இடுகிறீர்கள். இரண்டாவது பதிவைப் படித்தப் பின்னர்தான்; இந்த திறந்த-மடலை "நிச்சயம் எழுதியே ஆகவேண்டும்!" என்ற முடிவுக்கு வந்தேன்.
  • "கொடுத்த காசுக்கு(மட்டும்) கூவுவதும்" அல்லது "கொடுத்ததுக்கும் மேலாய் கூவுவதும்" உங்கள் விருப்பம்! ஆனால் "கூவுதல் என்ற அந்த இயல்புக்கும்/இலக்கணத்துக்கும்" உட்பட்டு கூவ வேண்டாமா? இப்படியா "டையனோசர் கர்ஜிக்கும் அளவுக்கும், சத்தமாய் கூவுவீர்கள்?!"
  • இன்னமும், உங்களுக்கு "அதிகமாய் கூவியது புரியவில்லை எனில்!" - அந்த "முட்டைப் பொடிமாஸ்" செய்தியை உதாரணமிட விரும்புகிறேன். உங்கள் மனசாட்சியைத் தொட்டு சொல்லுங்கள்! அந்த செய்தியைச் சொன்ன பிறகு "ஆவது" சூப்பர்-ஸ்டார் போன்ற "மாஸ்"கள் நினைவில் வரவில்லையா?!" அந்நடிரை வைத்து "மாஸ்" படம் உருவாக்கலாம்! என்றால் தவறில்லை! ஆனால், அவரை "வைத்து மட்டும்தான், மாஸ்" படம் உருவாக்க முடியும்! என்பது எப்படி முறையாகும்?
  • "சூப்பர் ஸ்டார் எனும் மாஸை"க் கூட விடுங்கள்! "மாஸ்" படங்கள் என்றால், அவை வெற்றி பெற்ற பின், மற்றவர்கள் கூவ-வேண்டும்! சமீபத்திய உதாரணம் - "பாகுபலி 2"!. அப்படியோர்  "உலக மகா மாஸ்" கொடுத்தவர்கள் கூடவா நினைவுக்கு வரவில்லை?! அவர்களே, எந்த "கூவலும் இல்லாமல்" அத்தனை அமைதியாய் இருக்கும்போது; இப்படிப்பட்ட கூவல் அவசியம்தானா? - அதிலும் "இசை வெளியீட்டு விழா" மேடையில்?!
  • அதே நடிகரின், இரண்டெழுத்து படம் ஒன்றிற்கு "அடுக்குமொழியார்" கூவியதற்கு; கிடைத்த விமர்சனம் நினைவிருக்கிறதா? அதில் கூட, பெருமளவில் "அந்த நடிகரின், போட்டி-நடிகரின் இரசிகர்களின்" விமர்சனங்களே அதிகம்! என்னைப் போன்ற நடுநிலையானோர் கூட "அந்தக் கூவலை" விமர்சிக்க விரும்பவில்லை! ஆனால், உங்களை இப்போது விமர்சிப்போர் - வேறெவரின் இரசிகர்களும் இல்லை! உங்களை இரசிக்கும், உங்கள் இரசிகர்களே! இந்த வேறுபாடு புரிகிறதா? அப்படிப் புரிந்தால், உங்கள் கூவலைப் பற்றி; இனி வேறெவரும் "கூவி"த் தெரிவிக்கவேண்டிய அவசியமில்லை!
  • நீங்கள் பேசியதை; நீங்களே திரும்பக் கேட்டீர்களா? கேட்டிருப்பினும், எங்களுக்காய் இன்னும் ஒருமுறை "நல்ல மனநிலையில் இருக்கும்போது" கேளுங்கள். நிச்சயமாய் சொல்கிறேன்: {பன்ச் ஸ்டைலில் வேண்டுமெனில்} நீங்க ஒருதடவை அந்த பேச்சைக் கேட்டீங்கன்னா; அப்புறம், உங்க பேச்சை நீங்களே இரசிக்க மாட்டீங்க!
  • "நீங்கள் அப்படிப் பேசியதே அபத்தமானது!" அதையும் சமாளிக்க, அவரின் போட்டி-நடிகரைப் பற்றி, ஒரு செய்தியை சொல்லி விளக்கம் சொன்னீர்கள் பாருங்கள்... அதை எப்படி விமர்சிப்பதே என்றே தெரியவில்லை! வெறுமனே சிரிப்பு தான் எஞ்சியது! அந்த தடுமாற்றமே "உங்கள் செயலின் தாக்கத்தை, நீங்கள் உணர்ந்திருக்கிறீர்கள்!" என உணர்த்தியது. 😊
  • கீழ்வரும் கருத்தை உங்களுக்கு மட்டும் சொல்லவில்லை! இனி "இசை வெளியீட்டு விழா" நடத்தும் அனைவருக்கும் சொல்கிறேன். "இசை வெளியீட்டு விழா" என்பது பாடலையும்/இசையையும்/நடனத்தையும் இணைத்த ஒரு விழா! அதில், பாடல் ஆசிரியருக்கும்/இசை அமைப்பாளருக்கும்/நடன இயக்குனருக்கும் - பாராட்டுகளைச் சொல்லிப் பழகுங்கள்! பாடல் வரிகளின் உன்னதம் குறித்துப் பேசுங்கள்! இசையின் மகத்துவம் குறித்துப் பேசுங்கள்! நடன அசைவுகளை பற்றி சிலாகியுங்கள்! அறிமுக பாடலாசிரியர்/இசையமைப்பாளர்/நடன-ஆசிரியர் எனில் - அவர்களைப் பற்றி, அதிகம் பேசுங்கள். அப்படிப் பேசப் பழகினால் "இம்மாதிரியான கூவல்கள்" குறையத் துவங்கும்! பின், "எந்த"க் கூவலும் அவசியமற்றுப் போய், "பேசப் பழகுவீர்கள்!".
*******
  • இதை எழுதும் முன், உங்கள் மேலிருக்கும் மரியாதைக்காவது, அப்பாடல்களைக் கேட்காமல் எழுதுவது, முறையற்றது என்பதால் எல்லாப் பாடல்களையும் குறைந்தது 5 முறையாவது கேட்ட பின்னே, இதை எழுதியிருக்கிறேன். வழக்கமாய், அந்நடிகரின் படப் பாடல்கள்; விரைவில் பிரபலமாகும்; கேட்கவும் நன்றாக இருக்கும். இறுதியாய் வெளிவந்த படத்தின் பாடல்கள் கூட அப்படித்தான். அதில், கவியரசு அவர்கள் "டப்பாங்குத்து" பாடலைக் கூட மிக அருமையாய் எழுதியிருப்பார். இப்படத்தின் பாடல்களில், எதை இரசித்தீர்கள்? நீங்கள் சொல்வது போல் "ஆளப்போறான் தமிழன்" என்ற பாடல்; பொதுவாய் தமிழர்களுக்கானது என்பதில் மாற்றுக் கருத்தில்லை! ஆனால், அந்தப் பாடலின் முன்னுரையைக் கேட்டீர்களா?! அது "பொதுவான தமிழர்களுக்கானதா?!" - அதை ஏன் ம(றந்/றைத்)து போனீர்கள்? "ஏன் இந்த தமிழ் அரசியல்?!" தமிழையும்/தமிழர்களையும் "முதலீடு செய்து" அரசியல்-"வியாபாரம்" செய்ய பலர் இருக்கின்றனர். ப்ளீஸ்... அவர்களின் பிழைப்பில் மண் அள்ளிப் போடாதீர்கள்!
  • குறைந்தபட்சம், பாடல்கள் இரசிக்கும் படியாய் இருந்திருப்பின் கூட; உங்கள் "கூவலை" கொஞ்சம் மறந்திருக்கலாம்! ஆனால்...
*******
  • "திரைத்துறையில் ஊழல் இருக்கிறது!" எனத் திரு. கமல் சொன்ன பிறகு, திரையுலக ஜாம்பவான்கள் அனைவரும்; "இன்றுவரை, மௌனித்து தியானத்தில்" இருக்க, அதை "தைரியத்துடன்" முதல் ஆளாய் உறுதி செய்த "அந்த நேர்மையான" பார்த்திபனைத் தான் நாங்கள் இன்னமும் விரும்புகிறோம். எனவே, இதுவே உங்களின் "முதலும்/இறுதியும்" ஆன கூவலாய் இருக்கவேண்டும் என்பதே எங்கள் ஆவல். ஆனால், முதலிலேயே குறிப்பிட்டது போல்; உங்களின் உரிமையை எங்கள் எவராலும் தடுக்கமுடியாது! நாங்கள், உங்களை (இன்னமும்)நேசிக்கிறோம் திரு. பார்த்திபன்! வாழ்த்துகளுடன், வணங்கி விடைபெறுகிறேன்.
பின்குறிப்பு: தயவு செய்து "கூவு/கூவி/கூவுதல்/கூவிய" என்பன போன்ற வார்த்தைகளை "பேசு/பேசி/பேசுதல்/பேசிய" என்ற வார்த்தைகளால் "பரிமாற்றிப் புரிந்துகொள்ளுங்கள்". மிகத்தெளிவாய் தெரிந்தே செய்த "அச்சுதட்டி"ப் பிழைக்காகக்(கூட), வருத்தம் தெரிவிக்கிறேன். 🙏

- விழியப்பன் (எனும்)  இளங்கோவன் இளமுருகு 
25082017
www.vizhiyappan.blogspot.com 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக