சனி, டிசம்பர் 24, 2016

அதிகாரம் 051: தெரிந்து தெளிதல் (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 2 - பொருள்இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 051 - தெரிந்து தெளிதல்

0501.  அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்
           திறந்தெரிந்து தேறப் படும்

           விழியப்பன் விளக்கம்: 
"அறம்/உடைமை/இன்பம் மற்றும் உயிர்பயம்" - இந்நான்கு 
           காரணிகளின் திறத்தை அறிந்த பின்னரே, ஒருவரை மதிப்பிடுதல் வேண்டும்.
(அது போல்...)
           "அடிப்படை/சாத்தியக்கூறு/தேவை மற்றும் நிலையாமை" -  இந்நான்கு காரணிகளின் 
           தேவையை உணர்ந்த பின்பே, ஓருறவில் இணைதல் வேண்டும்.
        
0502.  குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்
           நாணுடையான் சுட்டே தெளிவு

           விழியப்பன் விளக்கம்: 
அறமுணர்ந்த குடும்பத்தில் பிறந்து/குற்றங்களைக் களைந்து/
           பழியளிக்கும் செயல்களுக்கு அஞ்சி நாணுவோரை  - தெரிந்து தெளிய வேண்டும்.
(அது போல்...)
           சமமுணர்ந்த கொள்கையில் ஒன்றுபட்டு/ஊழலை எதிர்த்து/அறமழிக்கும் கூட்டணியைத் 
           தவிர்த்துப் போராடுவோரை - அறிந்து போற்ற வேண்டும்.
           
0503.  அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால்
           இன்மை அரிதே வெளிறு

           விழியப்பன் விளக்கம்: 
அரிதான விடயங்களைக் கற்ற, குற்றமற்ற சான்றோர்களைத் தெரிந்து
           தெளிந்தால்; அவர்களும், அறியாமை இல்லாமல் இருப்பது அரிதானது என்பது புரியும்.
(அது போல்...)
           நல்ல பழக்கங்களைப் பழகிய, தீமையற்ற நல்லோரிடம் நெருங்கிப் பழகினால்; 
           அவர்களுக்கும், சிற்றின்பம் இல்லாமல் இருத்தல் சாத்தியமில்லை எனத் தெரியும்.

0504.  குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
           மிகைநாடி மிக்க கொளல்

           விழியப்பன் விளக்கம்: 
ஒருவரின் நற்குணங்கள் மற்றும் தீயசெயல்கள் இரண்டையும் 
           ஆழமாய் ஆராய்ந்து; அவற்றுள் மிகையானது எதுவென்பதை, தெரிந்து தெளிதல் வேண்டும்.
(அது போல்...)
           ஓராட்சியின் பொதுச்சேவை மற்றும் சுயநலம் இரண்டையும் நடுநிலையோடு அலசி; 
           அவற்றுள் அதீதமானது எதுவென்பதை, பகுத்து அறிதல் வேண்டும்.

0505.  பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
           கருமமே கட்டளைக் கல்

           விழியப்பன் விளக்கம்: 
ஒருவரின் மேன்மை குணத்திற்கும் மற்றும் சிறுமை குணத்திற்கும்; 
           அவர்களின் செயல்களே அடிப்படை என்பதைத் தெரிந்து, பின்னர் தெளிவடைதல் 
           வேண்டும்.
(அது போல்...)
           சமுதாயத்தின் உயர்ந்த ஒழுக்கத்திற்கும் மற்றும் தாழ்ந்த ஒழுக்கத்திற்கும்; தனிநபரின் 
           ஒழுக்கமே காரணி என்பதை உணர்ந்து, பிறகு விமர்சித்தல் வேண்டும்.

0506.  அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்
           பற்றிலர் நாணார் பழி

           விழியப்பன் விளக்கம்: 
அறம்சார் பயமில்லாதோர், எந்தப் பற்றும் இல்லாததால் எப்பழிக்கும் 
           அஞ்சமாட்டர்! எனவே, அவர்களை நம்பித் தெளிவு கொள்ளலாகாது.
(அது போல்...)
           வாய்மையின் பலமறியாதோர், எந்த உறுதியும் இல்லாததால் எதற்கும் தயங்கமாட்டர்! 
           ஆதலால், அவர்களுடன் தொடர்ந்து உறவாடுதல் தவறானது.

0507.  காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்
           பேதைமை எல்லாந் தரும்


           விழியப்பன் விளக்கம்: பகுத்தறிவின் சிறப்பை அறியாதவர்களை, அவர்கள் மேலிருக்கும் 
           அன்பால் நம்புவது; எல்லாவகை அறியாமையையும் அளிக்கும்.
(அது போல்...)
           மனித அடிப்படையை உணராதோரை, அவர்கள் மேலிருக்கும் ஈர்ப்பால் தொடர்வது; 
           அனைத்து தீமைகளையும் விளைவிக்கும்.

0508.  தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
           தீரா இடும்பை தரும்
           
           விழியப்பன் விளக்கம்: ஆராயாமல், பலர் சொல்வதை வைத்து, பிறரைத் தெளிவோரின் 
           பின்பற்றாளர்களும்; தீர்க்க முடியாத துன்பங்களை அனுபவிப்பர்.
(அது போல்...)
           சிந்திக்காமல், புறக் காரணிகளைப் பார்த்து ஓருறவில் இணைவோரின் சந்ததியரும்; 
           சீர்படுத்த முடியாத ஒழுங்கீனத்தைக் கொண்டிருப்பர்.

0509.  தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின்
           தேறுக தேறும் பொருள்

           விழியப்பன் விளக்கம்: 
தெரியாத எவரையும், ஆராயாமல் தெளியக்கூடாது! அப்படி 
           நேர்ந்தால்; தெளிவதற்குத் தேவையானக் காரணிகளை ஆராய்ந்து, தெளிதல் வேண்டும்!
(அது போல்...)
           முறையற்ற உறவை, உணராமல் ஏற்கக்கூடாது! அப்படி நேர்ந்திடின், ஏற்பதற்குத் 
           தேவையானத் தகுதிகளை அலசி, ஏற்றதை ஆயவேண்டும்.

0510.  தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
           தீரா இடும்பை தரும்

           விழியப்பன் விளக்கம்: 
ஆராயாமல் ஒருவரை நம்புவது மற்றும் நம்பிய ஒருவரை சந்தேகம் 
           கொள்வது - இரண்டும்,  தீர்க்கமுடியாத துன்பத்தை விளைவிக்கும்.
(அது போல்...)
           யோசிக்காமல் ஓருறவில் இணைவது மற்றும் இணைந்த உறவை ஆழ்ந்து யோசிப்பதும் - 
           இரண்டும், முடிவற்ற சிக்கலை உருவாக்கும்.
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக