செவ்வாய், செப்டம்பர் 01, 2015

செந்தண்மை பூண்டொழுக லான் (குறள் எண்: 00030)



   "செந்தண்மை பூண்டொழுக லான்" என்று முடியும் குறள் எண் 0030-க்கான என் விளக்கவுரையைப் படித்திருப்பீர்கள். "செந்தண்மை பூண்டொழுகலான்" என்ற சொற்றொடரைப் பார்க்கும்போதும்/படிக்கும்போதும் உணர்ந்த பொருளை; விளக்கவுரை எழுதியபோது  வார்த்தையில் விவரிப்பது பெருத்த சிரமமாய் இருந்தது. அதை உங்களுடன் பகிர்ந்துகொள்ளவே இப்பதிவு. நீண்ட நேரம் யோசித்து சரியாய் விளக்கமுடியாத காரணத்தால், இருக்கும் விளக்கவுரைகளை ஆராய்ந்ததில்; இச்சொற்றடருக்கு - அருள் செய்பவர்/அருளோடு நடப்பவர்கள்/செவ்விய தண்ணருளை மேற்கொள்பவர்/இரக்கம் கொண்டு நடப்பவர்/அருள் பொழிபவர் - என்று பொருள்படுத்தி இருப்பதைக் காண முடிந்தது. ஏனோ, இவற்றில் எதுவும் எனக்கு முழுத்திருப்தியை அளிக்கவில்லை. இரக்கம் காண்பிப்போர்/அருள் புரிவோர் என்றெல்லாம் எழுதி; பின்னர் மாற்றி "தேர்ந்தெடுத்த அன்பை மேற்கொள்வோர" என்று எழுதியிருந்தேன். ஆனால்...

            விளக்கவுரையைப் பதியும் சிலமணித்துளிகள் முன்பு ஒரு பொருளாக்கம்  பிறந்தது! அதுதான் மிகப்பொருத்தமானது என்றும் தோன்றியது. உடனே, என்னுடைய விளக்கவுரையை சரியான வார்த்தைகள் கொண்டு மாற்றினேன். என் சிந்தனை; அதனால் பிறந்த பொருள் - இவற்றை உங்களுடன் பகிரவேண்டும் என்றெண்ணிய அடுத்த கணம் இப்பதிவை  எழுதிவிட்டேன். இறுதியாய் எனக்கு கிடைத்த பொருள் - "தாய்மை-கலந்த அன்பைக் கடைப்பிடிப்போர்" என்பதே. ஆம்! ஒரு தாயின் அன்பு அப்படித்தான் இருக்கும். கடிந்து கொள்ளவேண்டிய நேரத்தில் தவறாமல் கடிந்து கொண்டு/பாராட்ட வேண்டிய நேரத்தில் அதையும் தவறாமல் வெளிப்படுத்தும் அற்புதமான - அன்பின் குணம். கண்டிப்போ/பாராட்டோ - எதுவாயினும் அன்பு-கலந்தே இருக்கும் குணம். "அதிக வெய்யிலும்/அதிக குளிரும்" இல்லாத ஒரு சூழல் இருந்தால் எப்படி இருக்கும்? "காயாகவும் இல்லாமல்/கனியாகவும் இல்லாமல்" - இரண்டுக்கும்  இடைப்பட்ட நிலையில்...

இருக்கும் செங்காயின் சுவையே; தனிச்சுவை தானே???

      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக