சனி, ஜூலை 30, 2016

கபாலியின் குறைகள் - என் பார்வையில்...


       சமீபத்தில் வெளியான "கபாலி" திரைப்படம் குறித்து இருவேறு வகையான விமர்சனங்கள் வந்தன. இது கொண்டாடப்பட வேண்டிய படம் என்பதை என் முதல் விமர்சனத்திலேயே சொல்லி விட்டேன். எனவே, இது "சமுதாயத்திற்கு அவசியமான/சிறந்த படம்" என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. என் முந்தைய விமர்சனத்தில் சொன்னபடி, இரண்டாவது முறையும் பார்த்தாகிவிட்டது. கபாலியைப் பற்றிய என் புரிதல் மேலும் அதிகமாகியது. அதை உங்களோடு பகிர்ந்துகொள்ளவே இத்தலையங்கம்.

"முக்கியத்துவம் இல்லாத" குறைகள்:

       \\\ ரஜினி படத்திற்கு உரிய விறுவிறுப்பான காட்சிகள் இல்லை! காட்சிகளில் வலுவில்லை! திரைக்கதை மேலும் சிறப்பாய் இருந்திருக்கவேண்டும்! /// - என்பன போன்ற பல விமர்சனங்கள் உள்ளன. என்னளவில், படத்தின் விறுவிறுப்பிற்கு எந்த குறையும் இல்லை; ஒருவேளை, அவர்களின் எதிர்பார்ப்பு மிக-அதிகமாய் இருந்திருக்கக் கூடும். இருப்பினும், அந்த விமர்சனங்களை ஆழ யோசிக்கலானேன். இந்தப் படத்தை நான் இயக்கி இருந்தால் - என்ன செய்திருப்பேன் என்று யோசித்தேன். எனக்கு அப்படியொரு வாய்ப்பு கிடைத்திருந்தால், காட்சிகளின் வரிசையை மட்டும் மாற்றி அமைத்து இருப்பேன் என்று தோன்றியது - அதாவது எடிட்டிங் வேலை போன்று. திரைக்கதையில் பெருத்த தொய்விருப்பதாய் நான் உணரவில்லை. எனவே, என் பார்வையில் - காட்சியின் வரிசைகளை பின்வருவது போல் அமைத்திருப்பேன்:
  1. படத்தின் துவக்கம், கபாலி என்ற தலைமையின் கீழ் நடக்கும் "மறுவாழ்வு/சீர்திருத்த பள்ளியில்" துவங்கி இருக்கவேண்டும். அந்த பள்ளியின் ஆசிரியரான குமரன் பாடம் எடுப்பது போலவும்; அவர் கபாலி என்ற ஒரு தலைவனின் சிறப்பைப் பற்றிய வகுப்பை எடுப்பதாய் துவங்கி இருக்கவேண்டும்.
  2. மாணவர்கள் கபாலி என்பவர் யார்? என்ற கேள்வியைக் கேட்க; அந்த ஆசிரியர் கபாலியின் பின்புலத்தை விளக்குவதாய் காட்சிகள் விரியத் துவங்கி இருக்கவேண்டும்.
  3. "கபாலி ஏன் சிறைக்கு சென்றார்?" என்ற தொடர்-கேள்வியை அவர்கள் எழுப்பியிருக்க வேண்டும். அதற்கு அந்த ஆசிரியரே - மிகவும் உணர்ச்சி பொங்க - தமிழ்மாறன் என்ற பாத்திரத்தின் "கீழ்த்தரமான நயவஞ்சகத்தை"ப் பற்றி இழிவாய் சொல்லி, கபாலி சிறை சென்றதன் பின்புலத்தை விளக்கியிருக்க வேண்டும்.
  4. எண் 3-இல் சொல்லப்பட்டது போல் காட்சி அமைந்திருப்பின் - பின்வரும் காட்சியில், ஆசிரியர் குமரனே - கபாலியை கொலை செய்ய முனைவது நம்மைப் பெரிதும் ஈர்த்திருக்கும். பின்னர், குமரனை அவரின் தாய் கண்டித்து - தன் கணவரும்; குமாரின் தந்தையுமான தமிழ்மாறன் செய்த துரோகத்தை விளக்கி; உனக்கு அவர் அப்பத்தான் டா! எனக்கு புருஷன்!! நானே அதை தாங்கி/மறந்துவிட்டேன் என்றால் - அது உங்க அப்பனோட துரோகத்தால் தான் டா! கபாலி பெரிய மனிதர் டா! - என்பது போல் விளக்கம் கொடுத்திருக்க வேண்டும்.
  5. இந்நிலையில் "அப்பா என்று அழைக்கும்" அந்த பெண் பாத்திரம், ஆத்திரத்தில் "கருவுற்றிருந்த பெண்ணை கைவிட்ட கெட்டவரா கபாலி?!" என்று கேட்டிருக்கவேண்டும். அதற்கு, அந்தப் பெண்ணைப் பற்றி தெரிந்த அன்வர் போன்ற கதாபாத்திரம் உருக்கமாய்/ஆதங்கமாய் - "உன்னை ஏமாற்றிவிட்டு போனவன் மாதிரி நினைச்சுட்டியா?; கபாலியை அவர் நண்பனே துரோகத்தால் வீழ்த்திவிட்டான்!" என்று விளக்கம் கொடுத்திருக்க வேண்டும். அதை உணர்ந்த அந்தப் பெண், "ஆமாம். ஒரு பெண்ணை அம்மா ஆக்கறவன் ஆம்பளை இல்லை! பிறக்கும் குழந்தைக்கு நல்ல அப்பனா இருக்கறவன் தான் ஆம்பளை!!" என்று பேசுவது போல் வசனம் இருந்திருக்க வேண்டும் {இந்த சிந்தனையை தான் "ஆண்மையின் மகத்துவம்" என்ற தலைப்பில் - என்னுள் உதித்தது என்ற பிரிவில் - இன்று பகிர்த்தேன்}.
  6. இப்படியாய் - படத்தின் பின்வரும் எல்லா "நினைவு காட்சிகளும்" ஒவ்வொன்றாய் சொல்லி - கபாலியை விவரித்து; கபாலியின் மீதான எதிர்பார்ப்பை "படிப்படியாய் அதிகரித்து" இருக்கவேண்டும்! அப்போது, மாணவர்கள் "பெருத்த ஆர்வத்தோடு" - கபாலி எப்போது வெளியே வருவார்? - என்று கேட்க; அதற்கு அன்வரோ அல்லது மற்றெவரோ உரக்க-சிரிக்க...
  7. "முதல் காட்சியான" - மலேஷிய அரசின், கபாலியின் விடுதலை குறித்த விவாதம் - அடுத்த காட்சியாக தொடர்ந்திருக்க வேண்டும். அப்போது பற்றியிருக்கும் - பலரும் எதிர்பார்க்கும் படத்தின் விறுவிறுப்பு!
  8. தொடர்ந்து, கபாலியின் விடுதலைக் காட்சி வந்திருக்கவேண்டும். இதற்கிடையில், கபாலியைக் கொலை செய்ய ஒப்பந்தமாகும் "யோகி" பாத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டு இருந்திருக்கவேண்டும்.
  9. சிறையில் இருந்து வெளிவரும் கபாலி - அந்த முதல் துவம்சத்தை செய்துவிட்டு - சீர்திருத்தப் பள்ளிக்கு சென்றிருக்கவேண்டும். அதுவரை கபாலியை "மனத்திரையில், கபாலியைக் கண்ட மாணவர்கள்" - தங்கள் ஆரவாரத்தை வெளிப்படுத்தி இருக்கவேண்டும்.
  10. அதைத் தொடர்ந்து, மனைவின் நினைவு "நிகழ் கால காட்சிகளோடு" ஒப்பிட்ட "கற்பனைக் காட்சிகள்" சொல்லப்பட்டு இருந்தால் - கபாலியின் "மனைவி மீதான காதல்/அன்பு" - நம்மையும் தொற்றியிருக்கும். நம்மை, கபாலியோடு சேர்ந்து மனைவி என்ற கதாபாத்திரத்தை உள்வாங்கச் செய்திருக்கும்.
  11. பின்னர், அடுத்த காட்சியில் தைவானில் அந்த நபரைத் தேடிச்செல்லும் நிகழ்வு; கபாலியைக் கொலை செய்ய, யோகியுடன் வரும் "கபாலியால் துவம்சம் செய்யப்படட" அந்த நபரை - யோகியே கொலை செய்யும் திருப்பம் - அற்புதமாய் உணரப்பட்டு இருக்கும். அப்படி இருந்தால், யோகி யார் என்ற உண்மை நம்மையும் பரவசப்படுத்தி இருக்கும். அதன் பின்னர், மனைவி உயிரோடு இருக்கும் தகவல் சொல்லப்பட்டு இருக்கவேண்டும்.
  12. இப்படி காட்சிகள் அமைக்கப்பட்டு இருந்தால் - கபாலி தன் மனைவியைத் தேடிச் செல்லும் காட்சி - "எல்லோராலும், எந்த மறுப்புமின்றி" இரசிக்கப்பட்டு இருக்கும்; அதை, படத்தின் விறுவிறுப்பைக் குலைத்துவிட்டதாய் உணரப்பட்டு இருக்காது. உண்மையில், அந்த காட்சிகள் - மிகவும் அழகானவை/அற்புதமானவை.
  13. இறுதியாய் - டோனியை துவம்சம் செய்யும் இறுதிக் காட்சி!
  14. படம் பார்த்தவர்கள் - இந்த வரிசையில் காட்சிகளை எண்ணிப் பாருங்கள்! பலரும் எதிர்பார்க்கும் அந்த விறுவிறுப்பு உணரப்படும். இதைக் கூட - பலரும் விமர்சித்ததால் தான், வரிசைப் படுத்தி இருக்கிறேன். இல்லையேல்... முன்பே சொன்னது போல் - இந்தப் படத்தை நான் கொண்டாடினேன் - என்பதே உண்மை. இன்னும், படம் பார்க்காதவர்கள் - பார்த்துவிட்டு; இந்த வரிசைப்படி எண்ணிப் பாருங்கள். 
"மிகமுக்கியமான" குறைகள்:

   மேலுள்ளவை குறைகளே இல்லை! என்னளவில், மிகமுக்கியத்துவம் வாய்ந்த குறைகள் பின்வருபவையே:
  • கபாலி - யாருக்காகப் போராடுகிறார்? இந்தக் கேள்விக்கு சரியான/நியாயப்படுத்தும் விளக்கம் இல்லை! கபாலி "தமிழர்" எனும் பொது இனத்துக்காகப் போராடுகிறாரா? அல்லது "ஒரு குறிப்பிட்ட" இனத்துக்காகப் போராடுகிறாரா? - இதைத் தெளிவாய்/நேரடியாய் சொல்வதில் என்ன குழப்பம்?
  • இயக்குனரின் முந்தையப் படங்களை ஆழ்ந்து கவனித்தோர்க்கு - அவரின் "தலைசிறந்த சமூகப் போராட்டம்" தெரியும். அப்படங்களில் கூட, அவர் நேரடியாய் - தன் போராட்டத்தை வெளிக்காட்டவில்லை! ஆனால், ரஜினி எனும் நடிகர் என்ற அடிப்படையில் பார்த்தாலும் சரி; இல்லை... அயல்நாட்டில் நடக்கும் "சர்வதேச பிரச்னையை மையப்படுத்திய கதை" என்ற அடிப்படையில் பார்த்தாலும் சரி - இந்தப் படத்தின் தன்மையின் அடிப்படையில் பார்த்தால் - கதையின் மையக்கருத்தை "தெளிவாய்/நேரடியாய்" சொல்லி இருக்கவேண்டும்!
  • கபாலி - தமிழர் எனும் பொது இனத்திற்காக போராடுவதாய் இறுதிக் காட்சியில் சில வசனங்கள் வருகின்றன: "எங்க போனாலும், தமிழன் அடிமையாய் தான் இருக்கவேண்டுமா? தமிழன் கோட்டு-சூட்டு போடக்கூடாதா? தமிழன் ஆளக்கூடாதா?" என்பன போன்றவையே அவை. ஆனால், இந்த பொதுப் பிரச்சனையா படத்தின் கரு? அல்லவே!
  • "உலகம் ஒருவனுக்கா?!" என்ற முதல் பாடலில் வரும் பின்வரும் வரிகளைக் கவனியுங்கள்:
  1. \\\ கலகம் செய்து “ஆண்டவரின்” கதை முடிப்பான்! /// - "ஆண்டவர்" என்ற சொல், எந்த இனத்தில் பயன்படுத்தப்படும், என்பதை நான் விளக்கத் தேவையில்லை.
  2. \\\ பம்பரம் போல சுத்திக்கிட்டு; பறையிசை அடித்து நீ பாட்டுக்கட்டு! /// - பறையிசை என்பது உன்னதமான இசை. ஒரு மனிதனின் இறுதி யாத்திரையின் போதும் ஒலிக்கும் - அற்புதமான/உன்னதமான இசை. அந்த இசையை, இவ்வளவு "ஆழமாய்/ஆனந்தமாய்" பாடியது மிகுந்த பாராட்டுக்கு உரியது. ஆனால், இது போதாதே?!
  3. \\\ நாங்க எங்க பொறந்தா, உனக்கென்ன போடா?! தமிழனுக்காக வந்து நின்னவன் தான் உள்ளடா!! /// - மேற்கொண்ட உன்னத வரிகளை சொல்லிவிட்டு, பின்னர் ஏன் "தமிழன்" எனும் பொது இனத்தைக் குறிக்கும் வரி? தமிழர் எனும் பொது இனத்திற்குள் தான் - எல்லா இனமும் வருகிறது என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை! ஆனால், மிகத்தவறான வகையில் ஒரு இனம் ஒடுக்கப்படும் போது - அதை நேரடியாய் சொல்வது மிக அவசியம். இப்படிப் பொதுமைச்சாயம் தேவையில்லை! என்பது என் புரிதல்.
  4. \\\ வந்தவன/போனவன வாழவச்சவன் - இனி வாழ்ந்து காட்டப்போறன்! வாயை மூடி கவனி /// மற்றும் \\\ அலைகடல் அடங்குமோ…? அதிகாரக் குரலுக்கு, எப்போதும்… நீர்வீழ்ச்சி நீ தானே?! உனை நீந்திக் கடக்க முடியாதே?! /// - என்பன பிற வரிகள்.
  5. \\\ மேட்டுக்குடியின் கூப்பாடு - இனி, நாட்டுக்குள்ள கேட்காது! “இன” முகவரி - இனி விழி திறந்திடுமே!! /// - இந்த வரி எந்த இனத்துக்காக சொல்லப்பட்டது?
  6. இந்த அற்புதமான வரிகள் கூட "தேவையற்ற/தெரிந்தே அமைத்த அதீத இசையால்" மறைக்கப்பட்டு இருக்கிறது. இடையிடையே "கடுப்பேற்றும் வகையில் ஆங்கில வரிகள் வேறு!" வெகுநிச்சயமாய் - இந்த வரிகள், நேரடியாய் எவரையும் சென்று சேரக்கூடாது! என்ற முனைப்பு இருந்திருக்கிறது - என்பது என் பார்வை. அதற்கான காரணத்தையே, நான் ஆராய முற்படுகிறேன்.
  • அந்தப் பாடலைத் தவிர - காட்சிகளிலும் ஒரு இனத்தைக் குறிக்கும் வண்ணம் - கபாலி மற்றும் அவரைச் சார்ந்தோரின் உடைகள் துவங்கி; கபாலியின் உடல் நிறத்தை வர்ணிக்கும் வண்ணம் ஒரு பெண் கேட்கும் கேள்வியும், அதற்கு கதாநாயகி கொடுக்கும் விளக்கம் - போன்ற பல காட்சிகள் வருகின்றன. "தமிழர்கள் கருப்பு என்ற பொதுமையை" நான் மறுக்கவில்லை. ஆனால், கதாநாயகி தவிர்த்து - கபாலியை சுற்றியுள்ளோர் எல்லோரும் அப்படியோர் கருப்பாய் காண்பிக்க என்ன காரணம்? பிறகேன், கதாநாயகிக்கு மட்டும் "வெள்ளைத் தோல்?!"
  • \\\ இனிமேல், இந்த மாதிரி உடைகள் போடாதீர்கள்! கோட்டு தான் போடவேண்டும்; உடல்தான் சிலவற்றை நிர்ணயிக்கிறது /// - போன்ற வசனங்களால்; கபாலியை அற்புதமாய் மாற்றுவார் கதாநாயகி. ஒரு மாணவர் கூட, உடை சார்ந்த கேள்வியை கேட்கிறார்; வில்லன்கள் கூட அதைக் குறிப்பிட்டு கேட்கிறார்.
  • இப்படி ஒரு இனம் சார்ந்த அடையாளங்களை "வீரமாய்/அழகாய்/இயல்பாய்" - சில காட்சிகளிலும்; ஒரு பாட்டின் சில வரிகளிலும் "மறை"விளக்கிய இயக்குனர் - ஏன், "பொட்டில் அறைந்தாற் போல்" இந்த இனத்துக்காகத்துக்கான போராட்டம் தான் இந்த கதை என்று சொல்லவில்லை?! ஆனால், பல ஊடகப் பெட்டிகளிலும் - அந்த இனம் சார்ந்த போராட்டத்தை விவரிப்பதை; தொடர்ந்து தன் படங்களில் செய்வேன் என்று கூட சொல்கிறார் இயக்குனர். பின்னர், ஏன் - அதை கபாலியில் நேரடியாய் சொல்லவில்லை!
  • வெகுநிச்சயமாய் - இது கவனக்குறைவால் நேர்ந்தது அல்ல! \\\ காந்தி சட்டையைக் கழட்டியதற்கும்; அம்பேத்கர் கோட் போட்டதுக்கும் பெறிய காரணம் இருக்கு! அது, பெரிய அரசியல் /// - என்ற ஒற்றை வசனத்தில் "ஒரு இனப் போராட்டத்தை" அறிவார்ந்த வகையில் விளக்கிய இயக்குனர் - அதை வலுவான காட்சிகளால்/வசனங்களால் ஏன் சொல்லவில்லை? இந்த ஒற்றை வரி எல்லோருக்கும் "எல்லாவற்றையும் விளக்கிவிடாது!" எனவே, இது தெரிந்தே நடந்திருக்கிறது என்பதாய் நான் பார்க்கிறேன்.
  • இயக்குனருக்கு பயம் ஏதும் இருப்பதாய் தெரியவில்லை! முந்தைய படங்களில் கூட இதையே கையாண்டிருக்கிறார் - ஆனால், அவற்றிலும் நேரடியாய் சொல்லவில்லை. அப்படி "பொட்டில் அறைந்தாற் போல்" சொல்ல எது தடையாக இருக்கிறது? காரணம் என்னவென்பது முக்கியமில்லை. ஆனால், இதை இனிமேலாவது அந்த இயக்குனர் கவனத்தில் கொள்ளவேண்டும் என்று வேண்டுகிறேன். அப்போது தான், இதன் வீரியம் பலரையும் சென்று சேரும். அந்த வீரியம் தான் - குறைந்த அளவே எனினும், ஒரு இனம் இன்னமும் அடக்கப்படுவதை - மாற்றுவதற்கான, மாற்றத்திற்கு வழிவகுக்கும். என் வேண்டுதல் - இயக்குனரைச்  சென்று சேருமா?    
பின்குறிப்பு: முதல்முறை பார்த்தபோதே, உடன் வந்த நடப்பிடம் சொன்னேன்! "கபாலி 2.0" வருவதற்கான வாய்ப்பிறக்கிறது என்று. இப்போது படத்தின் இயக்குனரும் அதை உறுதி செய்திருப்பதாய், தகவல்கள் வருகின்றன. அப்படி ஓர் எண்ணம் இருப்பின்... இயக்குனருக்கு பின்வரும் இரண்டு வேண்டுகோள்களை விடுக்க ஆசைப்படுகிறேன்: 1. இந்த இனத்துக்கான போராட்டம் என்பதை "பொட்டில் அறைந்தாற் போல், தெளிவாய் - விளக்கமாய்" சொல்லுங்கள். தமிழர் என்ற பூச்சு வேண்டாம்; குறிப்பாய், ரஜினியை வைத்து "தமிழர் எனும் பொதுச்சாயம் வேண்டாம்! அதை மேற்குறிப்பிட்ட என் முதல் விமர்சனத்தில் தெளிவாய் சொல்லி இருக்கிறேன். 2. இந்தியாவில்; அதிலும் குறிப்பாய் தமிழ்நாட்டில் கதைக்களத்தை அமையுங்கள். எந்த வெளிநாட்டிலும், "இன்றைய காலக்கட்டத்தில்" இப்படியோர் இனப்பிரச்சனை இருப்பதாய் தெரியவில்லை! மேலும், ரஜினிக்காக மற்றவற்றில் சமரசம் செய்துகொள்ளாத நீங்கள் - சர்வதேச பிரச்சனை என்ற "பிரம்மாண்ட மாயையில் மட்டும்" ஏன் சமரசம் செய்துகொள்கிறீர்கள்?

என் பார்வை இயக்குனரைச் சென்று சேருமா என்று தெரியவில்லை! 
எவர் மூலமாவது சென்றால் சந்தோசமே! "கபாலி 2.0" ஆவது - எடுத்துக்கொண்ட 
பிரச்னையை இயல்பாய்/தெளிவாய்/நேரடியாய் பேசட்டும்! வாழ்த்துகள்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக