வெள்ளி, ஜூலை 01, 2016

"கொல்லாமை" என்ன சொல்கிறது???


           சமீபத்தில், திருக்குறளுக்கான விளக்கவுரை எழுதும் பணியில் "கொல்லாமை" அதிகாரத்தை எழுதினேன். முன்பே பலமுறை குறிப்பிட்டு இருப்பது போல் "குறளும் வாழ்வியலும்" என்ற வாட்ஸ்-ஆப் குழுவில் ஒவ்வொரு குறளுக்கான விளக்கவுரையும் பகிர்ந்தபோது - வழக்கம்போல், நட்புகளிடையே அதுசார்ந்த விவாதம் எழுந்தது. விவாதம் வலுப்பெற்றபோது, சில கருத்து வேறுபாடுகள் எழுந்தது வருத்தம் எனினும் - பொதுவில், அது ஓர் ஆரோக்கியமான வாதமே. அந்த அதிகாரத்தின் ஆரம்பம் முதலே, சிறுசிறு வாதமான கருத்துக்கள் எழுந்தன எனினும்; "தன்னுயிர் நீப்பினும் செய்யற்க" என்ற குறள் எண் 0327-இற்கான விளக்கவுரையின் போதுதான், விவாதம் உச்சகடடத்தை அடைந்தது. அந்த குறளுக்கான விளக்கவுரையைப் பார்த்தால், அதில் காந்தியடிகள் சொன்ன ஒரு கருத்துப்படம் வெளியிட்டிருப்பதைப் பார்க்கலாம். அந்த வாசகத்தில் இருக்கும் கருத்தையொட்டிதான், முதல் கடுமையான விவாதம் எழுந்தது.

           எங்களுடைய வாதங்கள் பற்றி இங்கே நான் ஏதும் எழுதப்போவதில்லை! அது முறையானதும் அல்ல. மாறாய், ஏன் கொல்லாமை என்ற இந்த அதிகாரத்தைப் பற்றி மட்டும்; இப்படியோர் வாதம் என்ற யோசனையின் பின்னணியே - இந்த தலையங்கம். என்னளவில், கொல்லாமை மற்றும் அதனைச் சார்ந்த புலால் மறுத்தல் இரண்டும் - என் நடப்புகளுக்கு ஒருவித குற்ற-உணர்வைக் கொடுத்திருப்பதை அறிந்தேன். இதே அடிப்படையில் "பிறன்மனை விழையாமை" போன்ற அதிகாரங்கள் எழுதும் போதும் எழும். ஆனால், கொல்லாமை சார்ந்து கடுமையான வாதங்களை வைத்தபோது தான் - அவர்களுக்குள் ஓர் குற்ற உணர்வு இருப்பதை உணர்ந்தேன். மற்ற அதிகாரங்களில் இருக்கும் குறளுக்கான விவாதத்தின் போது சொன்னது போல் - கொல்லாமை அதிகாரத்தையும் அறம்சார்ந்து சொல்லப்பட்டு இருப்பதாய்தான் பார்க்கவேண்டும். நம் பெருந்தகையின் பொதுமறை முழுக்கமுழுக்க அறம்சார்ந்த அறவுரையே ஆகும்... 

        என்பதை நாம் எந்நிலையிலும் மறக்கக்கூடாது! நமக்கு ஓர் அறம் பிடித்திருந்தால்; அதைப் பழக முயலவேண்டும். அதுதான் திருக்குறள் எனும் பொதுமறையின் அடிப்படை; மாறாய், நம்மால் ஒன்றைக் கடைபிடிக்க முடியவில்லை என்ற காழ்ப்புணர்வில்/குற்ற-உணர்வில் வாதிடுதல் முறையல்ல. இந்த அறங்கள், மதநூல்களில் இருக்கும் வரையறைகள்/நீதிக்கதைகள் போன்றவை. என்னதான் நாம் ஒவ்வொருவரும், ஒவ்வொரு மதம் சார்ந்திருப்பினும் - எல்லா வரையறைகளையும்/நீதிக்கதைகளையும் நாம் பின்பற்றுவதில்லை. நமக்கு சாதகமாய் பல விடயங்களை, நமக்கு பிடித்தவண்ணம் மாறுபட்ட விதத்தில் சொல்லி; நம்மை நாமே சமாதானப் படுத்திக்கொண்டுதான் வாழ்கிறோம். எல்லா மதம் சார்ந்த மனிதர்களும், இந்த விதிவிலக்கை எல்லோரும் கடைப்பிடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். நம்மால் இயன்ற நல்லறங்களை செய்வதில்தான் நம் எல்லோரின் முனைப்பும் இருக்கிறது. அதை மறந்து, ஏதோ ஒரு அறநூலில் சொல்லியிருக்கும்...

        மாறுபட்ட கோணத்தில் விவாதிக்கும்போது தான், சிக்கல்கள் எழுகின்றன. இது தேவையே இல்லை! மதம் சொல்லும் விடயமோ அல்லது பொதுமறையான திருக்குறள் போன்றவை சொல்லும் விடயங்களோ - இயன்றவரை பின்பற்றும் முனைப்பு இருக்கவேண்டும். அடிப்படையில், எல்லாவற்றையும் பின்பற்றுவதே சிறந்தது! அப்படித்தான் மனித(ன்/ம்) இருக்கவேண்டும்; ஆனால், மேற்குறிப்பிட்ட மதநூல் உதாரணம்போல் - விதிவிலக்குகளையும் "ஓர் மனிதனே" வரையறுக்க முனைகிறான். அதுபோல், திருக்குறள் போன்ற பொதுமறையில் சொல்லப்பட்டு இருக்கும் விடயங்களில் கூட மறுப்புகள் - எழக்கூடும்! எழலாம்!! - மறுப்புகளில் தவறேயில்லை! ஆனால், அவற்றைத் தேவையற்று விமர்சிக்கும்போது தான் பிரச்சனைகள் எழுகின்றன! என் நட்புகளின் வாதம் - எப்படி குற்ற-உணர்வாய் பார்க்கப்படுகிறது என்பதை இப்போது விளக்குகிறேன். மாமிசம் சாப்பிடாமல் அல்லது எந்த உயிரையும் கொல்லாமல் இருக்கமுடியுமா?...

          என்ற வாதத்தில் தவறேதுமில்லை! ஆனால், நம் இரத்தத்தில் உயிரணுக்கள் இருக்கின்றன; எனவே, நமக்கு புண் ஏற்பட்டு சீழாய் வடியும்போது - நாம் எந்த மருந்தையும் உட்கொள்ளக் கூடாது! அப்படி உண்பதால், நாம் பல நுண்ணுயிர்களைக் கொல்கிறோம். எனவே, ஒவ்வொருவரும் பல உயிர்களைக் கொல்பவர் தானே? என்பது போன்றோ (அல்லது) தாவரங்களுக்கும் உயிர் இருக்கிறது?! அதையும் தான் எல்லோரும் கொல்கின்றனர்! "கேக்" போன்ற தின்பண்டங்களில் "மறைமுகமாய் முட்டை அல்லது பிற உயிரினங்கள் சார்ந்த" உட்பொருட்கள் இருக்கின்றன. எனவே, இங்கே கொலை செய்யாதவர் யாரும் இல்லை; அந்த அடிப்படையில், காந்தியே கூட பல உயிரைக் கொன்றவர் தான்! வள்ளுவரும், இப்படி பல உயிரைக் கொன்றவர் தான்; சைவம் சாப்பிடுகிறோம் என்று சொல்லும் பலரும் அப்படியே! அவர்களும் பல உயிர்களைக் கொல்பவர் தானே?! என்பன போன்ற கேள்விகளையே, காழ்ப்புணர்வின்/குற்ற-உணர்வின்...

        அடிப்படையாய் பார்க்கிறேன். இதை மிக எளிதாய், அவர்களுக்கு கீழ்க்காணும் உதாரணம் மூலம் விளக்கி இருக்கமுடியும். ஆனால், விவாதம் சற்றும் எதிர்பாராத திசையில் செல்ல ஆரம்பித்ததும் - நான் அமைதியாகி விட்டேன். சில நாட்கள் கடந்தும், அதைச் சார்ந்த கருத்துகள் எழுந்தன. நான் ஏதும் அங்கே சொல்லவில்லை; மாறாய் இங்கே விளக்க விரும்புகிறேன். அவர்கள் கேட்டதன் அடிப்படையிலேயே; சளி-மருந்து துவங்கி பல்வகை மருந்துகளில் "ஆல்கஹால்" இருக்கிறது. அப்படிப்படட மருந்துகளை அருந்தாமல், உயிருடன் இருப்பவர் இங்கே யாரும் இல்லை! ஏன், நம் குழந்தைகள் பிறந்தது முதல் - நாமே அவர்களுக்கு அவ்வகை மருந்துகளை, நம் கையாலேயே கொடுத்து இருக்கிறோம்! எனவே, இந்த உலகில் "ஒவ்வொருவரும் குடிகாரரே!" என்று நான் வாதிட்டால் - அது எவ்வளவு பெரிய அபத்தமாய் இருக்கும்?! அந்த மருந்தில் இருப்பதும்/சாராயத்தில் இருப்பதும் ஆல்கஹால் தானே?!...

     என்று வாதிட்டால்; நான் "குடிக்காதவன் தெரியுமா?!" என்று மார்தட்டும் பலரும் என்ன சொல்வர்/செய்வர்? அவ்வாதம் தவறாய்தானே பார்க்கப்படும்? தாவரங்கள் போன்ற உயிர்கள்/உணவுகள் - மருந்தில் இருக்கும் ஆல்கஹால் போன்றதே! எப்படி மருந்தில் இருக்கும் ஆல்கஹால், நம் உயிருக்கு அடிப்படையான ஒன்றோ; அதுபோல், தாவர உணவான சைவமும் நமக்கு அடிப்படையான ஒன்று! எப்படி, சாராயம் போன்ற வஸ்த்துவில் இருக்கும் ஆல்கஹால் - தேவையற்ற/முறையற்ற ஒன்றோ; அதுபோல், பிற உயிரிங்களைக் கொன்று - இயற்கையைச் சிதைத்து - மாமிசம் போன்றவற்றை உண்பதும் தேவையற்றது/முறையற்றது! இந்த அறத்தைதான் "கொல்லாமை" எனும் அதிகாரம், அறமாய் போதிக்கிறது. அதை விடுத்து, சாராயம் குடிப்பது கேடானது எனச் சொல்லி, அவர்களைக் குடிகாரர்கள் என வரையறுத்துக் கொண்டே; மறுபுறம், மாமிசம் மனிதனுக்காகப் படைக்கப்பட்டது! என்ற வாதத்தில் அறமோ/நியாயமோ இல்லை.

"சாராயம் குடிப்பது நல்லது! அது, மனிதனின் மகிழ்ச்சிக்கு வழிவகுக்கும்!!"
என்றோ... அல்லது
"மாமிசம் உண்பது நல்லது! அவை, மனிதனுக்காய் படைக்கப்படடவை!!"

என்றோ - வாதிடுவது ஒவ்வொருவரின் தனிப்பட்ட தேர்வு/விருப்பம்!
ஆனால்...

அறம் என்பது நம் தனிப்பட்ட தேர்வோ/விருப்பமோ அல்ல! 
அறம் என்பது அறம்... அவ்வளவே!!

2 கருத்துகள்: