வெள்ளி, ஜனவரி 13, 2017

அதிகாரம் 053: சுற்றந்தழால் (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 2 - பொருள்இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 053: சுற்றந்தழால்

0521.  பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்
           சுற்றத்தார் கண்ணே உள
           
           விழியப்பன் விளக்கம்: ஒருவர் எல்லாவற்றையும் இழந்த பின்னும்; அவரின் முடிந்த 
           வாழ்வியலைப் பாராட்டி வலிமையூட்டும் சிறப்பு, சுற்றத்தாரிடம் உண்டு.
(அது போல்...)
           ஓர்தலைவர் உயிரோடு இல்லாத போதும்; அவரின் சிறந்த ஆட்சியை நினைவுகூர்ந்து 
           வியக்கும் இயல்பு, மக்களிடம் இருக்கும்.
      
0522.  விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா
           ஆக்கம் பலவும் தரும்

           விழியப்பன் விளக்கம்: குறையாத அன்புடைய சுற்றம், ஒருவருக்கு கிடைத்தால்; அது, 
           குறையாத வளர்ச்சியுடைய செல்வங்கள் பலவற்றையும் அளிக்கும்.
(அது போல்...)
           மாசற்ற வாய்மையுடைய குடும்பத்தலைவர், ஓர்குடும்பத்திற்கு கிடைத்தால்; அக்குடும்பம், 
           குறையற்ற ஒழுக்கமுடைய பண்புகள் பலவற்றையும் கொண்டிருக்கும்.
           
0523.  அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்
           கோடின்றி நீர்நிறைந் தற்று

           விழியப்பன் விளக்கம்: 
உறவுகள் மற்றும் நட்புகளுடன் இணைந்து வாழாதோரின் 

           வாழ்க்கை; சுற்றுக்கரை இல்லாத குளத்தில், நீர் நிறைந்திருப்பதைப் போன்றதாகும்.
(அது போல்...)
           எண்ணம் மற்றும் செயலை ஒப்பிட்டு ஆராயாதோரின் செயல்பாடு; உயிர்ப்பு இல்லாத 
           நிலத்தில், விதைகளை விதைப்பதற்கு ஒப்பாகும்.

0524.  சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வம்தான்
           பெற்றத்தால் பெற்ற பயன்

           விழியப்பன் விளக்கம்: 
ஒருவர் பெற்றிருக்கும், செல்வத்தின் உண்மையான பயன்; அவரின் 

           உறவு மற்றும் நட்புகளால், சூழப்பட்டு வாழ்வது ஆகும்.
(அது போல்...)
           ஒருவர் பெற்றிருக்கும், பிறவியின் நிரந்தரமான புகழ்; அவரின் எண்ணம் மற்றும் செயலில், 
           பொதுநலத்தைச் சேர்ப்பது ஆகும். 

0525.  கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய
           சுற்றத்தால் சுற்றப் படும்

           விழியப்பன் விளக்கம்: 
இருப்பதைப் பகிர்வது மற்றும் இன்மொழியில் பேசுவது - 

           இரண்டையும் பழகினால்; பெருகிடும் சுற்றம், எப்போதும் சூழ்ந்து இருக்கும்.
(அது போல்...)
           நல்லதைச் செய்வது மற்றும் எளிமையாய் இருப்பது - இரண்டையும் பின்பற்றினால்; சிறந்த 
           தொண்டர்கள், எக்காலமும் தொடர்ந்து வருவர்.

0526.  பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்
           மருங்குடையார் மாநிலத்து இல்

           விழியப்பன் விளக்கம்: 
அதீதமாய் கொடையளித்தும்/சினம் இல்லாமலும் இருப்போரை விட; 

           பெருமளவு சுற்றமுடையவர், விரிந்த உலகத்தில் மற்றொருவர் இல்லை.
(அது போல்...)
           ஓயாமல் உழைத்தும்/சந்தேகம் இல்லாமலும் இருப்போரை விட; அதிக நிம்மதியுடையோர், 
           பரந்த சமுதாயத்தில் வேறொருவர் இல்லை.

0527.  காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
           அன்னநீ ரார்க்கே உள

           விழியப்பன் விளக்கம்: 
காக்கையைப் போல், மறைக்காமல் சுற்றத்தை அழைத்துக் 

           கிடைத்ததைப் பகிர்ந்து உண்ணும்; குணம் உள்ளவருக்கே, செல்வம் உள்ளதாகும்.
(அது போல்...)
           ஆசிரியரைப் போல், மறுக்காமல் மாணாக்கர்களைச் சேகரித்துக் கற்றத்தைப் கற்பித்து 
           மகிழும்; முனைப்பு உடையவருக்கே, ஞானம் உள்ளதாகும்.

0528.  பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
           அதுநோக்கி வாழ்வார் பலர்

           விழியப்பன் விளக்கம்: 
எல்லோரையும் பொதுவாய் பார்க்காமல், ஒவ்வொருவரின் 

           தனித்திறனையும் மன்னன் ஆய்ந்தறிந்தால்; அவ்வியல்பைப் பார்த்து, பலரும் மன்னனைச் 
           சூழ்ந்து வாழ்வர்.
(அது போல்...)
           அனைவரையும் பணக்காரராய் பாவிக்காமல், ஒவ்வொருவரின் வசதியையும் கல்வி-
           நிறுவனங்கள் உணர்ந்தால்; அதைப் பயன்படுத்தி, பலரும் அந்நிறுவனங்களில் படித்து 
           முன்னேறுவர்.

0529.  தமராகிக் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக்
           காரணம் இன்றி வரும்

           விழியப்பன் விளக்கம்: 
சுற்றத்தாருள் ஒருவராய் இருந்து, நம்மைப் பிரிந்து சென்றவர்; 

           பிரிந்து சென்றதற்கான காரணம் சரியற்றதென உணரும்போது, மீண்டு(ம்) வருவர்.
(அது போல்...)
           பதவிகளில் ஒன்றைக் கொண்டிருந்து, கட்சியைப் பிரிந்து சென்றவர்; பிரிந்து சென்றதன் 
           விளைவு  பாதகமானதென உணர்ந்தால், மீண்டு(ம்) இணைவர்.

0530.  உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்
           இழைத்திருந்து எண்ணிக் கொளல்

           விழியப்பன் விளக்கம்: 
சுற்றத்திலிருந்து, காரணமின்றி பிரிந்து பின் காரணத்தோடு 

           வருவோரை; அரசாள்பவர், வேண்டியவற்றைச் செய்துப் பின்னர் பொறுமையாய் ஆராய 
           வேண்டும்.
(அது போல்...)
           குடும்பத்திலிருந்து, பணத்துக்காக விலகிப் பின் பணத்துக்காக வருவோரை; குடும்பத்தினர்,  
           மகிழ்ச்சியுடன் வரவேற்றுப் பின்னர் முழுமையாய் ஆராயவேண்டும்.
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக