வியாழன், ஜனவரி 19, 2017

மனிதம் காப்போம்!

{என்னப்பனைத் தொடர்ந்து வற்புறுத்தியதன் விளைவாய்... 
"77 வயதில்" பல ஆண்டுகளுக்குப் பின் 
மீண்டும் எழுத ஆரம்பித்து இருக்கிறார். 
இரண்டு நாட்களுக்கு முன் அவரெழுதிய படைப்பு கீழே}
*******

கவிபாட புதுவையினில் "கவிஞர் தாகூர்"
      கல்லூரி முகப்பினிலே நின்று; நானும்
புவிவாழ்த்தப் பிறந்தகவி, அறிஞர் தம்மை
      பெருமையுடன் மனத்திருத்தி, புகழின் மேன்மை
செவிநிறையச் செய்யவேண்டும் என்றே! எந்தன்
      சிந்தனையில் தமிழ்வாழ்த்தி; சிறப்பு கூறும்
தவவாழ்வுப் பெரியோரின் வழியில் செல்வேன்!
      தமிழே!நீ என்வழியில் பயணம் செய்வாய்!

செந்தமிழே! உன்னால்தான் பெருமை பெற்றேன்!
      செங்கரும்பின் சாறெனவே இனிதாய் வாழ்ந்தேன்!
இந்நிலத்தில் ஒருமொழிதான் உன்போல் உண்டோ?
      இதுஉண்மை; "கால்டுவெல்" "மு.வ." போன்றோர்
விந்தையுடன் எடுத்துரைத்தார்! நாமும் நம்மின்
      விருப்பத்தை வெளிக்கொணர வேண்டும்; போற்றும்
சிந்தையினில் இனியேனும் உறுதி ஏற்போம்!
      சிறப்புடனே தமிழகத்தை வாழச் செய்வோம்!

"தெருவெல்லாம் தமிழ்முழக்கம் செய்தல் வேண்டும்!"
      தெளிவாக பாரதியார் சொன்ன தாலே;
உருவான தமிழ்ப்பலகை புதுவை மண்ணில்,
       உயிரோடு மணக்கிறது! எனினும் நம்மின்
ஒருமையிலா உள்ளத்தால்; தமிழ கத்தில்
       உருப்படியாய் அதுபோன்ற வாய்ப்பே காணோம்!
பெருமையுடன் தமிழர்களே ஆண்ட போதும்;
       பெயரளவும் தமிழ்ப்பண்பே மலர வில்லை!

எங்கெங்கு காணினும் பொய்மை வீசும்!
      யாரிடத்தும் மனத்திரையில் உண்மை இல்லை;
பொங்கிவரும் அன்பினிலே ஒளியைக் காணோம்!
      பொறுப்பற்ற பெரும்போக்கு மலர்தல் காண்பீர்!
பங்கம்தான் விளைந்திடுமோ தமிழர் வாழ்வில்?
      பதைத்தெந்தன் மனஓலம் பலமாய் இங்கே
சங்கொலியாய் கேட்கலையோ? காத்தல் யாரோ?
      சத்தியமாய் வேண்டுகிறேன்; மனப்புண் போமோ?

நான்எழுதும் கவிதையினால் நாட்டில் என்ன
     நலம்விளையப் போகிறது? மழையும் இந்நாள்
வான்மணக்க வரவில்லை! புயலால் வீணே
     வளர்மரத்தைச் சாய்த்ததுதான் மிச்சம்! பஞ்சம்
தானாக படிப்படியாய் பெருகி நாளை
     தமிழகத்தை தாக்கவும் கூடும்! இன்றே
மானத்தைக் காப்பதற்கு விரைவாய் நாமும்
     மாற்றுவழி சிந்திப்போம்! வாரீர்! காண்போம்!

தருமத்தை சூதழித்தால் மீண்டும் வெற்றி
     தவறாமல் பாரதியும் கிடைக்கும் என்றார்!
கருமத்தை எண்ணிடுவோம்! விரைந்து நாட்டில்
     கணக்கின்றி புதியவழி காண்போம்! நாளை
உருவாக்கும் அணைகளிலே நீரைச் சேர்ப்போம்!
     உருப்படியாய் திட்டமிட்டு பயிர்தான் காப்போம்!
திருவளர்க்கும் தலைவர்களால்; தேனும் பாலும்
     தெருவெல்லாம் பாயும்வழி காண்போம்! வாரீர்!

எண்ணத்தில் தெளிவுதனை என்றும் காணும்
     ஏற்றத்தை இளம்பிறையாய் வளர்த்தல் வேண்டும்!
திண்ணையில் தினம்கூடி வெற்றுப் பேச்சை
     தீமையுடன் வளர்க்காத பொதுமை வேண்டும்!
பண்ணையினில் கூட்டாக பயிர்வ ளர்க்கும்
     பாசம்தான் தவறாமல் தழைத்தல் வேண்டும்!
கண்ணெனவே விடுதலையைக் காத்து நாட்டில்
     காலமெல்லாம் உரிமைதனைப் பெறுதல் வேண்டும்!

துறைதோறும் பணம்ஒன்றே கொள்கை யாக
     துயர்நெஞ்சில் கொண்டதனால் மக்கள் யாரும்;
சிறைபோட்ட மனத்தினனாய் வாழ்தல் ஆமோ!
     சிரம்தாழ்ந்து கழிவினமாய் ஆதல் நன்றோ?
மறைஒன்றை மறவாமல் வகுத்தல் செய்தால்
     மனம்மீண்டும் உயர்வளத்தைப் பெற்றே; நாளும்
பறைகொட்டி தமிழினத்தின் மானம் காப்போம்!
     பலதிக்கும் உயிரோட்டம் செய்வோம்! வாழ்வோம்!

நான்எழுதும் பாடலினால் தமிழ கத்தில்
     நலம்வளரப் போகிறதா என்ன? இந்நாள்
வான்மழைதான் பொய்த்ததனால் தஞ்சை மண்ணில்
     வாடிவிட்ட உயிர்களினால் ஒன்று சொல்வேன்!
தேன்மணந்த நாட்டிலின்று; எதிலும் எங்கும்
     தெருமணக்கும் அவலம்தான்; இனிமே லேனும்
"மாண்புடைய அரசியலார்" ஒருமை எண்ணம்
     மறவாமல் கொள்வதனால் மனிதம் காப்போம்!


{புலவர். இளமுருகு அண்ணாமலை}

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக