சனி, ஆகஸ்ட் 08, 2015

பொறிவாயில் ஐந்தவித்தான் (குறள் எண்: 0006)...




    பெருந்தகையின் சொல்லாட்சிக்கு சிறு-சான்று "பொறிவாயில் ஐந்தவித்தான்" என்று தொடங்கும் குறள் (எண்: 0006). இந்த குறளுக்கு மற்ற விளக்கவுரைகள் சொல்வது போல் "மெய், வாய், கண், காது, மூக்கு" என்ற ஐம்புலன்கள் தான் என்பதில் எந்த ஐயமும் இல்லை. மேலோட்டமாய் பார்த்தால், இங்கே "ஐந்துபொறி" என்று சொல்லப்படவில்லையே?! என்ற சந்தேகம் வரும். ஆனால், அங்கே தான் பெருந்தகையின் சொல்லாட்சி புலப்படுகிறது. "பொறி" என்பதை இரண்டாம் வரியில் "நெறி" என்பதனோடு ஓசை ஒன்றி வர-முதலில் எழுதியது என்பது எளிதில் விளங்கும். அதனால் "ஐந்தவித்தான்" என்று சொல்கிறார்; அதாவது (அந்த புலன்கள்) ஐந்தையும் அவித்தான் என்கிறார். அருமையான சொல்லாட்சி! மேலும், அவித்தான் என்ற சொல்லிற்கு பலரும் அடக்கினான் என்றே பொருள்படுத்தி இருக்கின்றனர்.

         ஒரு விளக்கவுரை ஆவணத்தில் "அவித்தான்" என்பதற்கு பன்படுத்தினான் என்று இருந்தது; அது எனக்கு பிடித்திருந்தது மட்டுமல்ல! அதுவே சரியே என்றும் தோன்றியது. நெல்-அவித்தல்; மணிலாக்கொட்டை-அவித்தல்; கடலை-அவித்தல் - போன்ற வழக்குகளை நம்மில் பலரும் கேட்டிருப்போம். அவித்தல் என்பது ஒரு தானியத்தை (பொருளை) "ஒரு பதத்தில் இருந்து இன்னொரு பதத்திற்கு மாற்றுவது - அதாவது, அதன் பன்பை மாற்றுவது" என்ற பொருள்படும். மேலும், அவ்வேலையில் ஈடுபட்டிருப்பவரைப் பார்த்து, மேற்பார்வையிடுவோர் "பதமா-பார்த்து எறக்குப்பா/எறக்கும்மா" என்று சொல்வதையும் கேட்டிருப்போம். அதனால், ஐந்தவித்தான் என்ற சொல்லுக்கு "பன்படுத்தியவன்" என்ற பொருளே மிகவும் பொருத்தம் என்று தோன்றியது. அந்த சொல்லையே என்னுடைய விளக்கவுரையிலும் பயன்படுத்தி இருக்கிறேன். இம்மாதிரி... 

நம் பொதுமறையில் ஆய்வதற்கு இன்னும் ஆயிரமாயிரம் இருக்கின்றன!!!      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக