வியாழன், பிப்ரவரி 02, 2017

அதிகாரம் 055: செங்கோன்மை (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 2 - பொருள்இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 055 - செங்கோன்மை

0541.  ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
           தேர்ந்துசெய் வஃதே முறை

           விழியப்பன் விளக்கம்: நடந்தவற்றை ஆழ ஆராய்ந்து, தெளிவுடன் நீதி வழங்குவதற்காக; 

           எவரிடமும் சார்பின்மையோடு இருந்து, இறைத்தன்மை கொண்டிருப்பதே - செங்கோன்மை 
           ஆகும்.
(அது போல்...)
           கொள்கையை ஆழ உணர்ந்து, உண்மையுடன் உரிமையை நிலைநாட்ட; இயல்பு 
           வாழ்க்கையைப் பாதுகாத்து, அறவழியில் நடப்பதே - போராட்டம் ஆகும்.
      
0542.  வான்நோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
           கோல்நோக்கி வாழும் குடி

           விழியப்பன் விளக்கம்: மழையின் அளவைச் சார்ந்து, உலக உயிர்களின் வாழ்க்கை 

           இருப்பது போல்; மன்னனின் செங்கோலைச் சார்ந்து, குடிமக்களின் வாழ்க்கை அமையும்.
(அது போல்...)
           உயிரணுக்களின் இயல்பை ஒட்டி, உடல் உறுப்புகளின் செயல்பாடு இருப்பது போல்; 
           மனதின் எண்ணங்களை ஒட்டி, மனிதர்களின் செயல் அமையும்.
           
0543.  அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
           நின்றது மன்னவன் கோல்

           விழியப்பன் விளக்கம்: பண்பில் சிறந்தோர் கற்கும் மறைநூல்களுக்கும், அவர்களின் 

           அறத்திற்கும்; அடிப்படையாய் இருப்பது, அரசாள்பவரின் செங்கோல் நிலைநாட்டும் 
           நெறியே ஆகும்.
(அது போல்...)
           பொதுவாழ்வில் வென்றோர் கடைப்பிடிக்கும் ஒழுக்கத்திற்கும், அவர்களின் அன்புக்கும்; |       
           ஊக்கமாய் இருப்பது, குடும்பத்தின் உறவுகள் விதைக்கும் கருணையே ஆகும்.

0544.  குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
           அடிதழீஇ நிற்கும் உலகு

           விழியப்பன் விளக்கம்: குடிமக்களை அன்பால் தழுவி, செங்கோலை நிலைநாட்டி நாட்டை 

           ஆளும் அரசாள்வோரின்; பாதையைத் தழுவி, மக்களும் நிலைபெறுவர்.
(அது போல்...)
           குடும்பத்தை அறத்தால் பழகி, வாய்மையைப் போதித்துக் குடும்பத்தை வழிநடத்தும் 
           பெற்றோரின்; இயல்பை பழகி, குழந்தைகள் வழிநடப்பர்.

0545.  இயல்புளிக் கோல்ஓச்சும் மன்னவன் நாட்ட
           பெயலும் விளையுளும் தொக்கு

           விழியப்பன் விளக்கம்: சரியான செங்கோலுடன், அரசாங்கம் நடத்தும் மன்னரின் நாட்டில்; 

           பருவமழையின் அளவும்/பயிர்களின் விளைச்சலும், ஒருசேர அதிகரிக்கும்.
(அது போல்...)
           உறவின் அடிப்படையுடன், இல்லறம் நடத்தும் மனிதர்களின் ஊரில்; அறச்செயலின் அளவும்/
           மனிதத்தின் ஆக்கமும், சரியாய் கலந்திருக்கும்.

0546.  வேல்அன்று வென்றி தருவது மன்னவன்
           கோல்அதூஉம் கோடாது எனின்

           விழியப்பன் விளக்கம்: அரசாட்சிக்கு வெற்றியைத் தருவது, வேல் இல்லை! அரசனின் 

           செங்கோலே முதற்காரணம்; மேலும், அச்செங்கோலும் சார்பில்லாமல் இருக்கவேண்டும்!
(அது போல்...)
           குடும்பத்திற்கு சிறப்பு சேர்ப்பது, சொத்து இல்லை! உறுப்பினர்களின் தன்னொழுக்கமே 
           முதன்மை; மேலும், அவ்வொழுக்கமும் குறையில்லாமல் இருக்கவேண்டும்!

0547.  இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை
           முறைகாக்கும் முட்டாச் செயின்

           விழியப்பன் விளக்கம்: அரசாள்வோர், நாடு முழுவதையும் காப்பர்! அந்த 

           அரசாள்வோரையும், நடுநிலையைத் தவறாத அவர்களின் செங்கோலே காக்கும்!
(அது போல்...)
           போராளிகள், உரிமை யாவையும் நிலைநாட்டுவர்! அந்தப் போராளிகளையும், அறவழியை 
           மீறாத அவர்களின் ஒழுக்கமே நிலைநாட்டும்!

0548.  எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்
           தண்பதத்தான் தானே கெடும்

           விழியப்பன் விளக்கம்: குடிமக்களால் எளிதில் அணுகமுடியாத, முறையான செங்கோலை 

           செலுத்தாத அரசாள்வோர்; தாழ்மையான நிலையை அடைந்து, தானாகவே கெட்டழிவர்.
(அது போல்...)
           உறவுகளால் கருணையோடு மதிக்கப்படாத, சரியான மனிதத்தைப் பகிராத மனிதர்கள்; 
           ஆதரவற்ற முதுமையை அடைந்து, சுயத்தை இழப்பர்.


0549.  குடிபுறம் காத்தோம்பிக் குற்றம் கடிதல்
           வடுஅன்று வேந்தன் தொழில்

           விழியப்பன் விளக்கம்: பிறரிடமிருந்து குடிமக்களைக் காத்துப் பேணுவது போல்; 

           தவறானோரைத் தண்டித்துக் குற்றங்களைக் களைவதும், அரசனின் தொழிலே! அது 
           குற்றமல்ல!
(அது போல்...)
           தீமைகளிலிருந்து பிள்ளைகளை விலக்கி வளர்ப்பது போல்; தவறுகளைக் கண்டித்துத் 
           தீயவற்றை நீக்குவதும், பெற்றோரின் கடமையே! அது தவறல்ல!

0550.  கொலையில் கொடியாரை வேந்துஒறுத்தல் பைங்கூழ்
           களைகட் டதனோடு நேர்

           விழியப்பன் விளக்கம்: அரசாள்வோரால், கொடியவர்களுக்கு அளிக்கப்படும் கொடூர-

           தண்டனைகள்; சுற்றியிருக்கும் இளம்பயிரைக் காப்பாற்ற, களையைப் பிடுங்குவதற்கு 
           நிகராகும்.
(அது போல்...)
           பெற்றோர்களால், பிள்ளைகளுக்கு வழங்கப்படும் கடின-அறிவுரைகள்; ஒளிந்திருக்கும் 
           பிரகாசத்தை வெளிக்கொணர, தங்கத்தைச் சுடுவதற்கு ஒப்பாகும்.
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக