செவ்வாய், பிப்ரவரி 28, 2017

வளர்க! வாழ்க!

{என்னப்பனின் கவிதை}

“யாதும்ஊர் யாவரும்நம் கேளீர்” என்னும்
     ஏகாந்த தத்துவத்தின் உண்மை எங்கே?
சேதமின்றி உரிமைநலன் காப்போம்! நாமும்
     சேர்ந்துழைப்போம்! மற்றவர்கள் உயர்வை வேண்டி
பேதங்கள் இங்கேஏன் எழுதல் வேண்டும்?
     பேய்முகங்கள் நமக்கொன்றும் சொந்தம் இல்லை!
வாதங்கள் செய்திங்கே வெற்றி காண்போம்!
     வளர்ச்சியினை நாம்பெறுவோம்! வளர்வோம்! வாழ்வோம்!

சாதிமத பேதமின்றி இந்தி யத்தின்
     சிறப்பொன்றே நம்மிதய வேள்வி என்ற
போதிமர புத்தனைப்போல்! வள்ளுவன் போல்!
     பொதுமைமன முகமதுபோல்! இயேசு வைப்போல்
சோதிமனம் கொண்டிங்கே மக்கள் வாழ்வில்
     சுந்தரனாய்! சுகபோகம் தவிர்க்கும் வண்ணம்
மோதிரமாய் நம்உடம்பைச் சூழ்தல் வேண்டும்!
     முழுமனதும் உலகநலம் கொள்ளல் நன்றாம்!

ஆண்டாண்டு காலமென அரசின் திட்டம்
     அத்தனையும் வீணாச்சு; ஏழ்மை வெள்ளம்!
கண்டபடி பாய்கிறது; படித்தோர் எல்லாம்
     கணக்கின்றி அலைகின்றார்! சமுதா யப்போர்!
மண்டியதால் நக்சலைட்நோய் பரவிப் போச்சு!
     மனம்வளர்த்த பெரியீரே! மக்கள் வாழ்வில்
கொண்டாட்டம் போடுகின்ற வகையில் நாமும்
     கூடிடுவோம்! ஓர்முடிவு காண்போம்! வெல்வோம்!

“பிறப்பொக்கும் எவ்வுயிர்க்கும்”; பின்னர் ஏனோ?
     பெருக்கெடுக்கும் கலவரங்கள்? சட்டம் தன்னால்
சிறக்கின்ற பணமுதலை அழிப்போம்! யார்க்கும்
     சீரான கல்விதனைக் கொடுப்போம்! இங்கே
உறக்கத்தில் சிரிக்கின்ற அதிகா ரத்தின்
     உரிமைதனை மாற்றிடுவோம்! உலகம் வாழ
திறமையுடன் உழைத்திடுவோம்! மேன்மை; செல்வம்
     தினம்பெறுவோம்! வெற்றிப்பண் பாடி வாழ்வோம்!

யார்என்ன ஆனாலும் எங்கள் உள்ளம்
     எப்போதும் கலங்காது; பிறரை வீழ்த்தல்
போர்முறையே தீவிரம்தான்; எண்ணம், மூச்சு
     பொதுவுடைமை என்பதெல்லாம் போயே போச்சு!
வேரறுக்கும் குறுக்குவழி, பொய்மை வெள்ளம்
     விளைநிலத்தில் எலிவளையாய்! வேண்டு மட்டும்
பேர்கெட்டுப் போனதனால் என்ன லாபம்?
     பொன்மனத்தின் பெரியோரே! உண்மை காண்பீர்!

ஆண்டுபல அரசியலார் போட்ட திட்டம்
     அணுவளவும் மக்களிடம் செல்லக் காணோம்!
நீண்டபல நாட்களிலும் முதலைப் பேய்கள்!
     நீள்வசதி பெற்றுயர்ந்தார்! எனினும் இந்நாள்
வேண்டுமட்டும் கல்விகற்ற பெரியீர்! இங்கே
     வேதவழி அறிஞர்பலர் நிறைந்த போதும்!
தீண்டாத உள்ளமுடன் மழையும் இந்த
     திருநாட்டில் பொய்த்ததுஏன்? சொல்வீர்! இன்றே!

வந்தாரை வாழவைக்கும் பெம்மா னாக
     வளர்த்த வகை போகட்டும்! இனியும் நாட்டோர்;
சிந்தனையை ஒன்றாக்கி சிறப்பாய் ஏற்றம்!
     சிலையாக வடித்திடுவோம்! நமைஎ திர்க்கும்
அந்நியரை விரட்டிடுவோம்! நமது மானம்
     அழியாமல் காத்திடுவோம்! உலகில் யார்க்கும்
இந்தியர்கள் இளைத்தவர்கள் இல்லை என்றே
     இமயத்தில் அறைகூவல் விடுப்போம்! வாரீர்!

தேன்மணக்கும் திருவிடத்தீர்! தெளிந்த ஞானம்
     தேர்ந்திட்ட மனவளத்தீர்! உண்மை பேசும்
மான்பார்வை இளைஞர்களே! நமது நாட்டில்
     மானமிகு அப்துல்கலாம் எண்ணம் ஏற்று
ஏன்நாமும் வல்லரசாய் கூடா தா?என்
     ஏக்கத்தை உடன்களைந்து இந்தி யத்தாய்
கூன்மனத்தில் மகிழ்ச்சிதனைப் பெறவே! சிங்க
     “கர்ஜனையாய்” கிளர்ந்தெழுக! வளர்க! வாழ்க!    

{புலவர். இளமுருகு அண்ணாமலை}

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக