சனி, ஆகஸ்ட் 20, 2016

கத சொல்லப் போறோம் (2016)...


     இன்று "கத சொல்லப் போறோம்" என்ற தமிழ்ப்படத்தைப் பார்த்தேன். பெரியதாய் ஏதும் விளம்பரம் இருந்ததாய் தெரியவில்லை; பலரும் இந்தப் படத்தின் பெயரைக் கேட்டிருக்கக்கூட வாய்ப்பில்லை. படம் பார்த்த பின்னர் தான் "2016 மே மாதம்" வெளிவந்ததைத் தெரிந்து கொண்டேன். குழந்தைகளை மையப்படுத்திய அற்புதமான படம்! எந்த ஊடகத்திலும் இது சார்ந்த விளம்பரம்/விமர்சனம் பார்த்தாதான் நினைவில்லை. படம் பார்த்த பின்னர் தான் "Behindwoods" இணையதளம் நல்ல விமர்சனத்தைக் கொடுத்திருப்பதைப் பார்த்தேன். இம்மாதிரியானப் படங்களை விமர்சித்து, மேலும் சிலருக்கு கொண்டு செல்வது என் கடமையென உணர்ந்தேன். படத்தைப் பற்றிய என் பார்வை கீழே:
  • பல படங்களைப் பார்க்கும் போது, ஒரு பார்வையாளனாய் - நம் மனது அடுத்த காட்சியை யூகிக்கும். பெரும்பான்மையான படங்களில், அதிக அளவில் நம் யூகங்கள் சரியாய் இருக்கும். ஆனால், மிக எளிமையான கதைக்களம் கொண்ட இந்த படத்தில் - முதல் காட்சியில் இருந்தே - நம் யூகங்களை "கிட்டத்திட்ட முழுதுமாய்" இயக்குனர் தகர்த்திருக்கிறார். ஒரு பார்வையாளனின் நிலையிலிருந்து அவர் அதிகம் யோசித்திருப்பதாய் உணர்கிறேன். எளிமையான காட்சி அமைப்புகள் தான்; ஆனால், நம் யூகங்கள் தவறாகின்றன; அவற்றை, என்னவென்று குறிப்பிட்டு உங்கள் அனுபவத்தைக் குறைக்க விரும்பவில்லை. படம் பார்த்து, நீங்களே உணருங்கள்.
  • சிறுவர்களை மையப்படுத்திய படம் - குறிப்பாய் ஆதரவற்ற சிறார்களை மையப்படுத்திய படம். சிறுவர்களை மையப்படுத்தி பல படங்கள் வந்திருப்பினும் - வணிக நோக்கத்தை முன்னிறுத்தாத - சிறுவர்களின் எதார்த்தத்தை முன்னிறுத்தி திரைக்கதையை அமைத்திருப்பது தான் இந்த படத்தின் மிகப்பெரிய பலம். சமரசம் செய்யாத படைப்பும்/படைப்பாளியும் - ஒரு சமுதாயத்திற்கு கொடுப்பினை. 
  • சிறார்களின் உணர்வுகளை, அதிலும் குறிப்பாய் ஆதரவற்ற சிறார்களின் உணர்வுகளை - இயக்குனர் யதார்த்தமாய்/அழகாய் காட்சிப்படுத்தி இருக்கிறார். காட்சிகளின் யதார்த்தத்தை உணர்ந்து; குழந்தைகளோடு பயணித்தது, காட்சிகளை கவனமாய் உள்வாங்குதல் மிக அவசியம். 
  • நகைச்சுவை, சிறார்களின் உணர்வுகள், மற்ற கதாபாத்திரங்களின் உணர்வுகள் - என்று பல்வகை நிகழ்வுகளை - மிகச்சரியான விதத்திதில்; திரைக்கதையில் புகுத்தி இருக்கும் இயக்குனரின் திறன் கவனிப்புக்கும்/பாராட்டுக்கும் உரியது.
  • படத்தின் வசனங்கள் மிகவும் கூர்மையாய் இருக்கின்றன. என்ன காரணமோ - முதல் 30 நிமிடங்களில் வரும் வசனங்களை, பின்னணி இசையால் சரியாய் கேட்கமுடியவில்லை. தணிக்கை காரணமென தெரியவில்லை - ஏனெனில், தணிக்கை செய்யும் விடயங்கள் அந்த வசனங்களில் நிச்சயம் இல்லை. ஆனால், அதன் பின்னர் பின்னணி இசை சரியாய் கையாளப்பட்டு இருக்கிறது.
  1. நீ கொடுத்து வச்சவ பிரியா - அம்மாவைப் பார்க்க முடியல்லைன்னாலும்; அம்மா மாதிரி இருக்கறவங்களையாவது பார்க்கமுடியுது!
  2. எங்களை மாதிரி குழந்தைகளை கடவுளின் குழந்தைன்னு சொல்வாங்க; ஆனால், அம்மாங்கற கடவுளோட இருக்கற நீங்கள் தான் கொடுத்து வைத்தவர்கள்.
  3. எனக்கு ஒரேயொரு ஆசைதான் - என்னை அனாதையாய் விட்டுவிட்டுப் போன, என் அம்மாவைப்  பார்த்து ஒரு முத்தம் கொடுக்கனும்.
  4. மேலுள்ளவை சில உதாரணங்கள்.
  • பிரியா, அருண் மற்றும் அனிதா என்பன படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள். மேலும் - அர்ஜுன், சீனு, ஜெனி - என்பன படத்தின் பிற முக்கிய கதாபாத்திரங்கள். 
  • "எங்க மாஸ்ட்டர் கூட அம்மாதான்!" என்று அனிதா பேசும்போது - நம் கண்ணீர் நீரை வர வைப்பது மட்டுமல்ல! ஒரு ஆசிரியர் எப்படி இருக்கவேண்டும் என்பதையும் "பசுமரத்தாணி போல்" பதிய வைக்கிறார் இயக்குனர். 
  • "மாயவித்தை (Magic)" செய்யும் கலைஞர்கள் பெரும்பான்மையை மகிழ்ச்சியான மனநிலையில் இருப்பர்; அவரைக் கூட, அனிதா தன் ஏக்கத்தைக் கேள்வியாய் கேட்டு அவரை நெகிழவைக்கும் காட்சி - நம் கண்ணிலும், கண்ணீரை வரவைக்கிறது.
  • அருணின் பாத்திர படைப்பு மிக அருமை; அந்த சிறுவன் அருமையாய் நடித்திருக்கிறான். சில இடங்களில் "சராசரி படங்களில் வருவது போல், பெரிய மனித தனமாய் பேசுவது" எரிச்சலைக் கொடுத்தாலும் - அவற்றையெல்லாம் மீறி அந்த சிறுவனின் பாத்திர படைப்பும், அவனின் நடிப்பும் பெருத்த பாராட்டுதலுக்கு உரியது.
  • பிரியாவின் நடிப்பு பாராட்டுதலுக்கு உரியது; இயல்பான/முதிர்ச்சியான நடிப்பு. அந்தக் குழந்தைக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. வாழ்த்துகள் மகளே!
  • அருண் - சீனு இடையே நடக்கும் "குழந்தைகளுக்கே உரித்தான சண்டைகள்" மிக யதார்த்தமாய் காட்சி படுத்தப்பட்டு இருக்கின்றன. உண்மையில், குழந்தைகளின் சண்டைகள் இப்படித்தான் இருக்கும். எந்த "வணிக"சாயமும் இல்லாமல் இயல்பான காட்சிகள்.
  • சிறார்களை மையப்படுத்திய, பல திரைப்படங்களில் வருவது போல் - "குழந்தைகளைச் சார்ந்த பெரியவர்கள் இடம்பெறுவது; அவர்களில் இடையே நடக்கும் உறவு/உரிமை பிரசனைகள்" - போன்றவை இந்தப் படத்தில் அறவே இல்லை. குழந்தைகளைச் சார்ந்த பெரியவர்களும், சிறார் கதாப்பாத்திரங்களுடன் இணைபிரியாமல் பயணிக்கின்றனர்.
  • சிறுவர்களை மையப்படுத்திய எல்லா திரைப்படங்களிலும் - வலுக்கட்டாயமாய் இளைஞன்/இளைஞி என்ற கதாபாத்திரங்களை உருவாக்கி; அவர்கள் இடையே ஒரு "காதல் கதையை" தனியே உருவாக்கி - வியாபாரப் புத்தியைக் காண்பிப்பது, தமிழ் திரைப்படத்தின் சாபக்கேடு. என் நினைவில் இருக்கும் வண்ணம், இதற்கு எந்த படமும் விதிவிலக்கில்லை.
  • இந்த படத்திலும் "அரவிந்த் - அஞ்சலி" என்ற ஆசிரியர்கள் இடையே ஒரு காதல் கதை இருக்கிறது. ஆனால், அவர்கள் இருவரும் - குழந்தைகளை விடுத்து; தனியே எங்கும் பயணிக்கவில்லை! மிக குறிப்பாய் "டூயட்" பாடவில்லை; அதுபோல், அவர்கள் இடையே ஒரு உறவு இருப்பதை - குழந்தைகளை மையப்படுத்திய காட்சிகளாலேயே நம்முள் விதைப்பது - இயக்குனரின் சாமர்த்தியம் (சபாஷ் கல்யாண்!).
  • அருண் - ஜெனி இடையே "சிறார் காதல்" போல் சித்தரித்து இருப்பது மிகவும் அழகு! எல்லாக் காலத்திலும், இவ்வயதொத்த சிறார்களுக்கு "சிறார் காதல்" எழுவது மிகவும் இயல்பான ஒன்றே!! அதை மிகச் சரியாய் இறுதிவரை காட்டிய இயக்குனர், இறுதியில் தடுமாறி இருப்பது சறுக்கல்!
  • அருண் - சீனு இடையில் நடக்கும் சண்டையை முடிவுக்கு கொண்டு வருவதாய், அந்த சறுக்கலை இயக்குனர் செய்திருப்பது புரிகிறது. ஆனால், அதை வேறு விதத்தில் "மேலும் அழகாய்" செய்திருக்கலாம் என்பது என் பார்வை.
  • "வடை சுடும் பாட்டி" அற்புதமான - நகைச்சுவை கலந்த கற்பனை; வெகு கவனமாய், அதை சில வினாடிகளுக்குள் காட்சியாக்கி நகர்ந்திருப்பது - இயக்குனரின் திறனை வெளிப்படுத்துகிறது.
  • படத்தில் வரும் "சம்மர் கேம்ப்பை" கூட - எந்த பிரம்மாண்டமும் இல்லாமல், யதார்த்தமாய் நம்மை அந்த சூழலோடும், நிகழ்வுகளோடும் ஒன்றவைத்து அமைத்திருப்பது பாராட்டுதலுக்கு உரியது. 
  • ஒவ்வொரு முறையும், சீனுவுக்கு பிரச்சனை எழும்போது - "அங்க பார்ரா வெள்ளைக் காக்கா பறக்குது!" - என்றபடி வசனம் பேசி சீனுவின் நண்பர்கள் "விலகி நகரும்" காட்சிகள் - மகிழ வைக்கின்றன.
  • "குழந்தைகள் காப்பக விடுதி"யின் காவலாளி கதாபாத்திரமும் அருமை; அவரின் நடிப்பும் பாராட்டுக்குரியது. 
  • பல திரைப்படங்களிலும், தேவையில்லாமல் "காவலர்களை வில்லன் போல்" சித்தரிக்கும் காட்சிகள் இல்லாதது - மிகவும் சிறப்பானது/பாராட்டுக்குரியது. அதிலும், பல படங்களிலும் வில்ல-காவலராய் வரும் அந்த நடிகரையையே நடிக்க வைத்திருப்பது - சிறப்பு!
  • அஞ்சலியாய் வரும் அந்த ஆசிரியர், இறுதிக்கு காட்சியில் அணிந்திருக்கும் "ஜாக்கெட்டின்" பின்புற வடிவமைப்பைக் கண்ணில் தெரியாதவாறு காட்சி படுத்தி இருக்கலாம். சிறார்களை மையப்படுத்திய பல படங்களில், இதைவிட "கீழ்த்தரமான ஆடைகளை" படத்தில் வரும் இளைஞிகள் அணிந்திருப்பதைப் பார்த்து பழக்கப்பட்டவர்கள் தான் நாம் என்னும் - இம்மாதிரியான ஒரு தரமான படத்தில்; அப்படியொரு காட்சி வருவதைக் கூட மனம் ஏற்க மறுக்கிறது
  • "படத்தின் முடிவை" இயக்குனர் ஏன் இப்படி வைத்திருக்கிறார் என்பது புரிந்தாலும்; அதை வேறொரு விதமாய் - மேலும் சிறப்பாய் சொல்லி இருக்கலாம் என்பது என் பார்வை. ஒருவேளை, இயக்குனர் - இங்கும் நம் எதிர்பார்ப்பைத் தகர்க்க எண்ணியிருப்பாரோ?
  • படம் மொத்தமும் "1 மணி நேரம் 43 நிமிடங்களில்" காட்சிப் படுத்தப்பட்டு இருக்கிறது; அதற்குள், நம்மை முழுதாய்/புதியதாய் ஒரு அனுபவத்தை உணர வைத்திருப்பது - இயக்குனரின் சிறப்பு.

பின்குறிப்பு: "கபாலி மற்றும் கமல் படங்களை" கொண்டாடுவது அவசியமானதே! நானும் அப்படி கொண்டாடி இருக்கிறேன். நாம் கொண்டாட மறந்தாலும், பெரும்பான்மையான ஊடகங்கள் - நமக்கு நினைவூட்டி கொண்டாட வைத்துவிடும். ஆனால், இம்மாதிரியான தரமான படங்களை "நாம்தான் தேடிச் சென்று" கொண்டாட வேண்டும்! நாம் கொண்டாடுவதோடு மட்டும் நில்லாமல்; பிறருக்கு கொண்டு சேர்ப்பதும் - நம் கடமையாகிறது. என் கடமையை நான் செய்துவிட்டேன்; உங்கள் கடமையையும் தவறாமல் செய்திட வேண்டுகிறேன். 

                      வாய்ப்பு கிடைப்போர்; தவறாமல் அவரவர் குழந்தைகளோடு பாருங்கள்! 
உறுதியாய் - உங்கள் அனுபவம்; மேலும் ஒரு கூடுதல் பரிமாணத்தைக் கொடுக்கும்!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக